bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 25 ஜூன், 2017

புரோட்டா, பிளாஸ்டிக் அரிசி அரசியல்

 இன்றைய தேதியில் பயனுள்ள தகவல் குறிப்பு என்றால் அது, “பிளாஸ்டிக் அரிசையை கண்டுபிடிப்பது எப்படி?” என்பது தான். 

அந்த அளவுக்கு பிளாஸ்டிக் அரிசி குறித்த பீதி பரப்பப் பட்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே பிளாஸ்டிக் அரிசி குறித்த தகவல்கள் உலவிக் கொண்டிருந்தன என்றாலும் தற்போது தமிழக அரசே இதை முன்னின்று பரப்பியதைப் போல தெரிகிறது. 
வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தாலும், பிளாஸ்டிக் அரிசியைக் கண்டறிந்து பறிமுதல் செய்ய குழு அமைத்து நடவடிக்கை, பிளாஸ்டிக் அரிசி குறித்து தகவல் கொடுக்க தனி தொலைபேசி இலக்கம் அறிவிப்பு என தமிழக அரசின் நடவடிக்கைகள் மக்களை பீதிக்கு உள்ளாக்கின.
அது என்ன பிளாஸ்டிக் அரிசி?
 சமூக ஊடகங்களில் ஒரு காணொளிக் காட்சி பரவி வருகிறது. ஓர் இயந்திரத்தின் ஒரு முனையில் பிளாஸ்டிக் தாளை உள்ளிடுகிறார்கள். 

அப்படியே காமிரா நகர்ந்து செல்கிறது, அந்த பிளாஸ்டிக் தாள் பிரிந்து உடுட்டப்பட்டு அரிசி போல் சிறுசிறு துண்டுகளாக வெளிவருகிறது. இந்த இடத்தில் அது அரிசி தானா என்பதை உறுதி செய்ய காமிரா அதை நெருங்கிச் செல்லவில்லை. கழிவு பிளாஸ்டிக் தாளை பிளாஸ்டிக் துருவல்களாக மாற்றும் வேலை நடக்கிறது எனக் கருதுகிறேன். ஆனால் அதை பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கும் தொழிற்சாலை என்ற தலைப்பில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
 ஒரு கிலோ அரிசி தோராயமாக 30 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை ரகம் வாரியாக விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஒரு கிலோ கச்சா பிளாஸ்டிக் துருவலின் விலை 100 ரூபாய்க்கும் அதிகம். இதில் கலப்படம் செய்து லாபம் பார்க்க வேண்டுமென்றால் ஒரு கிலோ பிளாஸ்டிக்கைக் கொண்டு எத்தனை கிலோ அரிசி தயாரிப்பார்கள்? 
எளிமையான இந்தக் கேள்வி கூட எழுப்பப்படாமல் தான் அந்த காணொளிக் காட்சி ஊரெங்கும் உலா வருகிறது.
பிளாஸ்டிக் அரிசி என பரப்பப்படும் இந்த அரிசியை செயற்கை அரிசி என்று சொல்லலாம். உருளைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றிலிருந்து செயற்கையாகத் தயாரிக்கப்படும் அரிசி தான் பிளாஸ்டிக் அரிசி என தூற்றப்படுகிறது. சீனா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் பல ஆண்டுகளாக உணவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
அரிசியிலிருக்கும் கார்போஹைட்ரேட் தான் உருளை கிழங்கு, மரவள்ளிக் கிழங்குகளிலும் இருக்கிறது என்றாலும் நெல் அரிசியோடு ஒப்பிட்டால் கொஞ்சம் சத்துக் குறைவானது. 
அதேநேரம் இன்று பீதியூட்டப்படுவது போல இந்த செயற்கை அரிசியை உண்பதால் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படுவதில்லை. இந்தியாவின் பழைய பஞ்ச காலங்களில் உருளைக் கிழங்கும், மரவள்ளிக் கிழங்கும் தான் அரிசிக்குப் பதிலாக உணவாக பயன்படுத்தப்பட்டன என்பதை நாம் நினைவுக்குக் கொண்டு வருவது அவசியம்.
என்றால் ஏன் இவ்வாறு பீதியூட்டப்படுகிறது? 
அது தான் இதன் பின்னாலிருக்கும் அரசியல். ஊடகங்களில் பரபரப்பாக திரும்பத் திரும்ப காட்டப்படும் எதுவும் உண்மையாகத் தான் இருக்கும் எனும் பொதுப் புத்தி மிகக் கவனமாக உருவாக்கி பாதுகாக்கப்பட்டு வருகிறது. பேரழிவு ஆயுதங்களை தயாரித்து பதுக்கி வைத்திருக்கிறது என்று கூறித் தான் ஈராக்கின் மீது படையெடுத்தது அமெரிக்கா. 
ஒரு பேனாக் கத்தியைக் கூட கண்டுபிடிக்கவில்லை என்றாலும் கூட ஈராக் பேரழிவு ஆயுதங்களை வைத்திருந்தது  என்பது பொதுப் புத்தியாக நிலைப்படுத்தப் பட்டிருக்கிறது. ஸ்டாலின் கோடிக் கணக்கில் படுகொலைகளைச் செய்தார் என்று பரப்பட்டிருக்கிறது. 
அவ்வாறு எழுதியவர்களே பணம் வாங்கிக் கொண்டு தான் அவ்வாறு எழுதினோம் என்று வாக்குமூலம் கொடுத்து விட்ட பிறகும், அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட பிறகும் ஸ்டாலின் கோடிக் கணக்கில் மக்களை படுகொலை செய்தார் என்பது பொதுப் புத்தியாக நிலைப்படுத்தப் பட்டிருக்கிறது. அதாவது ஊடகங்களை கையில் வைத்திருப்பதன் மூலம் நம்முடைய மூளையை கட்டுப்படுத்துகிறார்கள். 
அது தான் இந்த பிளாஸ்டிக் அரிசி விவகாரத்திலும் நடந்து கொண்டிருக்கிறது.
மரபணு மாற்றப் பயிர்கள் என்பது இன்று சாதாரணமாகி இருக்கிறது. இந்த மரபணு மாற்றப் பயிர்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவு வகைகளை உண்பதன் மூலம் உடலுக்கு எவ்வளவு தீங்கு நேர்கிறது? 
என்னென்ன நோய்கள் ஏற்படுகின்றன என்றெல்லாம் ஆய்வுகள் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது. ஆனாலும் அவை எந்த விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்தவில்லை. 
தெளிவாகச் சொன்னால், மரபணு மாற்று பயிர்களுக்கு, விதைகளுக்கு எதிராக பேசினால் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அது குற்றம் என்று சட்டம் சொல்கிறது. அண்மையில் தெலுங்கானாவில் மரபு சார்ந்த மிளகாய் விதையை பரப்பினார் என்பதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். 
ஊடகங்களில் அந்தச் செய்தி போலி மிளகாய் விதைகளை விற்றவர் கைது என வெளிவந்திருக்கிறது. அது என்ன போலி மிளகாய் விதை? 
மரபணு மாற்ற விதைகளை பற்றி மக்களிடம் விழுப்புணர்வு செய்யக் கூடாது. பாரம்பரிய விதைகளை வைத்திருந்து விற்றால் கைது. இந்த இரண்டையும் இணைத்துப் பார்த்தால் என்ன முடிவுக்கு வர முடியும்? 
முதலாளிகளுக்கு, ஏகாதிபத்தியங்களுக்கு எதுவெல்லாம் லாபத்தைக் கொட்டிக் கொடுக்குமோ அவைகலெல்லாம் – அவைகளில் உடலுக்கு தீங்கு இருந்தாலும் – உலகில் நல்லவைகளாக பொதுப் புத்தியில் உருவாக்கப்படும். 
ஏகாதிபத்தியங்களுக்கு லாபத்தை கொட்டிக் கொடுக்காத எதுவும் – அவைகளில் உடலுக்கு நன்மை இருந்தாலும் – உலகில் கெட்டவைகளாக பொதுப் புத்தியில் உருவாக்கப்படும்.
சில நாட்களுக்கு முன்னால் புரோட்டாவை சாப்பிடாதீர்கள் என்றொரு செய்தி தீயாய் பரவியது. 

மைதா மாவு எப்படி உருவாக்கப்படுகிறது? 
அதில் என்னென்ன வேதிப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன? 
அவை என்னென்ன விதங்களில் உடலுக்கு தீங்கு செய்கின்றன என்று விரிவான ஆய்வுக் கட்டுரை போல அந்தச் செய்தி அமைந்திருந்தது. 
படித்துப் பார்த்த பலர் புரோட்டா சாப்பிடுவதையே விட்டு விட்டார்கள். மைதாவுக்கு மெருகூட்ட, அதை வெண்மையாக்க அந்த வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதும், அவைகளை உண்பதால் உடலுக்கு தீங்கு ஏற்படும் என்பதும் உண்மை தான். 
இதை புரோட்டாவுக்கு எதிராக மட்டும் ஏன் பயன்படுத்தினார்கள்? 
கேக் வகைகளிலிருந்து மேற்கத்திய உணவுகளான பீட்சா வகைகள் வரை அனைத்திலும் மைதா கலந்திருக்கிறது. மைதாவை பயன்படுத்தாதீர்கள் என்று பரப்பினால் அது விழிப்புணர்வு, 
புரோட்டாவை சாப்பிடாதீர்கள் என்று பரப்பினால் அதை விழிப்புணர்வு என்று எடுத்துக் கொள்ள முடியுமா? 
ஏழைகளின் உணவாக மலிவான விலையில், உடலுக்கு உடனடி தெம்பளிக்கும், பரவலாக உண்ணப்படும் உணவான புரோட்டாவை ஒழித்து விட்டு அந்த இடத்துக்கு பீட்சாவைக் கொண்டு வர செய்யப்படும் சதித் திட்டம் என்பதாகத் தானே அதை புரிந்து கொள்ள முடியும்.
இதேபோலத் தான் அஜினாமோட்டாவுக்கு எதிரான பிரச்சாரமும். கரும்பு மரவள்ளிக் கிழங்கு ஆகியவைகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை உப்பு. 
இதன் வேதிப் பொருள் மோனோ சோடியம் குளூட்டமைட் என்பது. அஜினாமோட்டோவுக்கு எதிரான பிரச்சாரங்களில் எல்லாம் தவறாமல் பயன்படுத்தப் பட்டிருக்கும் ஒரு வாசகம், ‘அதில் மோனோ சோடியம் குளூட்டமைட் எனும் தீங்கான பொருள் கலக்கப்பட்டிருக்கிறது எனவே அதை பயன்படுத்தாதீர்கள்’ என்பது தான். 

ஆனால் அஜினாமோட்டோவின் ஒவ்வொரு பாக்கெட்டிலும் மோனோ சோடியம் குளூட்டமைட் எனும் பெயர் தவறாமல் அச்சிடப்பட்டிருக்கும். அதாவது அஜினோமோட்டோவில் மோனோ சோடியம் குளூட்டமைட் எனும் பொருள் கலந்திருக்கவில்லை. 

அஜினாமோட்டோவின் பெயரே மோனோ சோடியம் குளூட்டமைட் தான் என்பதே அதன் பொருள். சாதாரண உப்பை பயன்படுத்தாதீர்கள் அதில் சோடியம் குளோரைடு எனும் தீங்கான பொருள் கலந்திருக்கிறது என்று சொன்னால் அது எவ்வளவு நகைப்புக்கு இடமானதோ அதே போலத் தான் அஜினாமோட்டோவில் மோனோ சோடியம் குளூட்டமைட் கலந்திருக்கிறது என்பதும். 
இது உணவில் சுவை கூட்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஓர் உப்பு. 
சீனா, ஜப்பான், கொரியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பலநூறு ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் ஒரு துணை உணவுப் பொருள். அளவோடு பயன்படுத்தினால் எந்தத் தீங்கும் இல்லை.
இப்படி உடல்நலம் எனும் பெயரில் ஏகாதிபத்தியங்களுக்கு ஆதரவான செய்திகள் தொடர்ந்து பரப்படுகின்றன. மீண்டும் மீண்டும் திணிப்பதன் மூலம் மக்களின் மூளையைக் கட்டுப்படுத்தும் வேலை நடந்து வருகிறது. அதற்கு எளிமையான இன்னொரு எடுத்துக்காட்டு தான் உப்பு. சமையலில் சாதாரண உப்பின் பயன்பாடு முழுவதுமாக ஒழிந்து விட்டது என்றே சொல்லலாம். 
அந்த அளவுக்கு அயோடின் உப்பின் ஆதிக்கம் இருக்கிறது. அயோடின் உப்பை தொடர்ந்து பயன்படுத்துவதால் உடலில் ஏற்படும் தீங்குகள் குறித்து ஆய்வுகள் இருக்கின்றன. ஆனாலும் மக்கள் அயோடின் உப்பை பயன்படுத்துவதே உடலுக்கு நல்லது என எண்ணி பயன்படுத்துகிறார்கள்.
 இது எப்படி நடந்தது? 
இந்தியாவில் 7 சதவீத குழந்தைகள் அயோடின் குறைபாட்டுடன் இருக்கின்றன என்றொரு ஆய்வறிக்கையை வெளியிட்டார்கள். அதைக் கொண்டே இந்தியாவின் மொத்த மக்களும் அயோடின் உப்பை பயன்படுத்துவதே நல்லது என்று பிரச்சாரம் செய்தார்கள். 

இன்று டாடா உட்பட பல நிறுவனங்கள் பல்லாயிரம் கோடிகளில் அயோடின் உப்பு வணிகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
எல்லாம் இருக்கட்டும், பிளாஸ்டிக் அர்சியிலும், மைதாவிலும் அஜினாமோட்டோவிலும் என்ன ஏகாதிபத்திய ஆதாயம் இருக்கிறது என எண்ணுகிறீர்களா? 
பொதுவாக தனியார்மயம் தாராளமயம் உலகமயம் எனும் பெயரில் எல்லா நாடுகளிலும் மூக்கை நுழைக்கிறது அமெரிக்கா. இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்குவதிலிருந்து, விவசாய மானியங்களை ஒழிப்பது வரை எல்லா நாடுகளின் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால் தன்னுடைய நாட்டில் விவசாய மானியங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்து வைத்திருக்கிறது. 
இந்த விசயத்தில் அமெரிக்காவுக்கு பெரும் சிக்கலாக இருப்பது சீனாவின் உற்பத்திப் பொருட்களே. உலகில் சீனப் பொருட்கள் இல்லாத இடங்களே இல்லை எனும் அளவுக்கு அது தன் எல்லையை விரித்துக் கொண்டிருக்கிறது. 
இதை தடுப்பதற்காக சீனம் சார்ந்த பொருட்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் கட்டவிழ்து விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 
செயற்கை அரிசி, அஜினாமோட்டோ போன்றவை சீன உற்பத்திப் பொருட்களே.
இன்னொரு முக்கியமான அம்சமும் இதில் இருக்கிறது. 

பிளாஸ்டிக் அரிசி குறித்த செய்திகள் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சமூகத் தளங்களில் வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் அது தற்போது திடீரென வேகம் பெற்றதற்கான காரணத்தை நாம் பதஞ்சலியோடு இணைத்துப் பார்க்க வேண்டும். மோடி பிரதமராக உருவாக்கப்பட்டதில் அதானிக்கு இருக்கும் தொடர்பைப் போலவே பதஞ்சலி நிறுவனத்துக்கும் தொடர்பு உண்டு.
 மோடி பிரதமரானதற்கு பிறகு தான் பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் வெகுவாக கவனம் பெற வைக்கப்பட்டன. 
அந்த அடிப்படையில் பதஞ்சலி அரிசி விற்பனையிலும் ஈடுபடத் தொடங்கியிருக்கிறது. 
பதஞ்சலி அரிசி என்ற பெயரில் விற்கப்படும் அரிசிக்கான சந்தையை உறுதிப்படுத்தவே, பிளாஸ்டிக் அரிசி என்ற பெயரில் அரிசி குறித்த பீதி திட்டமிட்டு ஏற்படுத்தப்படுகிறது.
எனவே, நாம் நாமாக நீடிக்க வேண்டுமென்றால் அதற்கு இருக்கும் ஒரே வழி நம்முடைய மூளையை பிறர் கைப்பற்றி விடாமல் தடுப்பது மட்டுமே. நம்மைச் சுற்றி நிகழும் எதுவானாலும், முதலில் அதில் இருக்கும் அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும். 
அரசியல் இல்லாமல் இங்கு எதுவும் இல்லை. எல்லாவற்றிலும் இருக்கும் அரசியலைப் புரிந்து கொள்ள அவை குறித்து பருண்மையாகவும் நுணுக்கமாகவும் தெரிந்து கொள்ள வேண்டும். 
சுருக்கமாகச் சொன்னால் சமூகத்தில் நடப்பவைகளை நாம் சரியாக உள்வாங்காமல் போனால் நம்முடைய மூளையை பிறர் கைப்பற்றுவதை நம்மால் தடுக்க முடியாமல் போகும்.
                                                                                                                           நன்றி:செங்கொடி.தளம்.

சனி, 24 ஜூன், 2017

யோகத்தில் ‘தெய்வத் தன்மை’?

உ ண்டென்பது வீண் புரட்டேயொழிய வேறில்லை.

மூச்சடிக்கிப் பலவகையாக யோகஞ் செய்வதன் மூலம் சிறிது சரீர திடம் பெறுவதற்கு ஏதாவது மார்க்கமிருக்குமேயொழிய அதில் வேறு “தெய்வீகத்தன்மை” யாதொன்றுமில்லை யென்பதே நமது அபிப்பிராய மாகும். 
யோகா உடலை இளமையாகவும்,சுறு,சுறுப்பாக வைத்திருக்க உதவும் சிறப்பான  உடற்பயிற்சி மட்டுமே.அதில் தெய்வீகம் என்பது ஏதும் கிடையாது.மூச்சுப்பயிற்சி மூலம் மனதை அமைதி படுத்தலாம்.
ஆகவே இதுவும் கழைக் கூத்து, சர்க்கஸ், ஜால வித்தை முதலியவை களைப் போல ஒன்றுதான் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் நமது மக்கள் யோகத்தில் ஏதோ “தெய்வீகத்தன்மை” இருப்ப தாக நம்பியிருப்பதால் அநேகர் யோகிகள் என்று கிளம்பி, சில ஜாலங்களைச் செய்து, பாமர மக்களை மலைக்கச் செய்து ஏமாற்றி வருகின்றனர். 
ஜன சமூகமும் இவர்கள் பால் பரம்பரையாகவே ஏமாந்து கொண்டும் வருகிறது.
இதற்கு உதாரணமாகச் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கவனித் தால் விளங்கும். “ஹட யோகம்” என்பதில் சித்தி பெற்றவராகச் சொல்லப்பட்ட நரசிம்மசாமி யென்பவர் சென்னை, கல்கத்தா முதலிய இடங்களில், பிரபல ரசாயன சாஸ்திரிகளின் முன்னிலையில், கொடிய விஷம், கண்ணாடித் துண்டுகள், ஆணிகள் முதலியவற்றை விழுங்கி உயிரோடிருந்தாராம். 
இந்த நிகழ்ச்சியைக் கண்டு ரசாயன சாஸ்திரிகள் எல்லோரும் மலைத்துப் போய் விட்டனர். ஆகவே யோகத்தின் மகிமையைப் பற்றிப் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டது.
ஆனால் இதே நரசிம்ம சாமியார் சில தினங்களுக்கு முன் ரெங்கூனில் இரண்டாம் முறையாக விஷங்களையும் கண்ணாடித் துண்டுகளையும் விழுங்கிய கொஞ்ச நேரத்திற்குள் மரண யோகம் பெற்று விட்டார். 
இதற்குக் காரணம் விஷம் உண்டவுடன் ‘ஹட யோகம்’ பண்ணுவதற்குக் கொஞ்சம் நேரமாகிவிட்டது என்று பத்திரிகைகளில் சொல்லப்படுகின்றது. 
ஆனால், அவைகளை உட்கொள்ளும் சாதுரியத்திலோ அல்லது மாற்று மருந்தை உட்கொள்ளுவதிலோ அல்லது பழக்கப்பட்ட அளவை உட்கொள்ளுவதிலோ தவறிவிட்டார் என்று ஏன் சொல்லக் கூடாதென்று தான் நாம் கேட்கின்றோம்.
யோகத்தில் ‘தெய்வத் தன்மை’ உண்டென்பது வீண் புரட்டேயொழிய வேறில்லை. 
சாதுரியத்தினாலோ அல்லது பழக்கத்தினாலோ அல்லது மாற்று மருந்துகளினாலோ செய்யப்படும் காரியங்களையெல்லாம் யோகமென்றும், மந்திரமென்றும், தேவதையென்றும், தெய்வசக்தியென்றும் சொல்லி ஒரு கூட்டத்தார் ஜன சமூகத்தை ஏமாற்றி வருகிறார்கள் என்பதை அறிய வேண்டு கிறோம். 
ஆகையால் இனியேனும் இது போன்ற மோசடியான காரியங்களைக் கண்டு ஏமாறாமலிருக்கும்படி எச்சரிக்கை செய்கிறோம்.
குடி அரசு –  03.04.1932
இப்போது மோடி அரசு செய்வது யோக பயிற்சி அல்ல.விளம்பர யுக்தி.மேலே உள்ள படத்தைப்பார்த்தாலே பாஜக யோக பக்தி புரியும்.

வியாழன், 22 ஜூன், 2017

பாரத மாதாவாலும் காப்பாற்ற முடியாது

இன்று தலித்தை குடியசுத்தலைவராக கொண்டுவரப்பாடுபடும் பாஜக திடீர் தலித் பாசம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது.
முதல் இந்திய தலித் குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயணன்தான் .
அப்போது கே.ஆர்.நாராயணனுக்கு பாஜக கொடுத்த ஆதரவும்,அவர் தலித் என்பதால் காட்டிய பாசமும் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய பாசமலர் கதை.
இந்துத்துவா மனநிலையை உடைய ராம்நாத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முன் மதசார்பின்றி இயங்கிய கே.ஆர்.நாராயணன் பற்றி அறிந்து கொள்வது அவசியம். 
இந்திய நாட்டின்   குடியரசுத்தலைவர் பதவிக்கு தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை தேர்ந்தெடுத்திருப்பது இது இரண்டாவது முறைதான் 
இந்தியாவின் 10ஆவது செயல்பட்ட கே.ஆர்.நாராயணன் அவர்கள் தான் முதன்முதலாக தலித் சமுதாயத்திலிருந்து தேர்வு குடியரசுத்தலைவராக  செய்யப்பட்டவர்.
 குடியரசுத்தலைவர் பதவி என்பது ஆளுநர் மற்றும் பிரதமர் அளவுக்கு சக்தி வாய்ந்த பதவி கிடையாது. பொம்மைதான்.குறிப்பிட்டு சொல்லப்போனால் நாம் அடிமைப்பட்ட இங்கிலாந்தை கணக்கில் கொண்டு அரச பரம்பரை அதாவது எலிசபெத் மகாராணி  அளவுக்கு இந்தியர்களால்,இந்தியர்களுக்காக அடிமைப்புத்தியுடன் உருவாக்கப்பட்டதுதான்குடியரசுத்தலைவர் பதவி.

இங்கிலாந்தில் மகாராணிக்கு என்ன அதிகாரம் இருக்கிறதோ அவ்வளவுதான் கொண்டவர் நமது  குடியரசுத்தலைவர்.
ஆனால், அப்படி வெறும் ‘ரப்பர்-ஸ்டாம்ப்’ குடியரசுத்தலைவராக செயல்பட்டவரல்ல கே.ஆர்.நாராயணன். லண்டன் பொருளியல் பள்ளியில் அரசறிவியல் பயின்றவர். 
குஜராத் கலவரத்தை தடுக்க தீவிரமாக முயன்றவர். 
குஜராஜ் கலவரத்தை பற்றி இவர் அளித்த பேட்டியை கவனிக்க வேண்டியது மிக அவசியமான ஒன்றாகும். 
இனி அன்றைய பாஜக தனக்கு அளித்த தொல்லைகளைப்பற்றி  கே.ஆர்.நாராயணன் அவர்களே அளித்த  பேட்டி பின் வருமாறு:
"குஜராத் கலவரத்திற்குப் பிறகு வாஜ்பாய் திறமையான முறையில் எதையும் செய்யவில்லை. குஜராத் கலவரத்தை தடுத்து நிறுத்தக் கோரி நான் அவருக்குப் பலகடிதங்கள் எழுதினேன். 
அவரிடம் இது குறித்து நேரிலும் பேசினேன். 
இராணுவத்திற்கு துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரத்தை வழங்கியிருந்தால் குஜராத் கலவரங்கள் பெருமளவிற்கு தடுக்கப்பட்டிருக்கும் ஆனால் சட்டத்தின் கடமையை மத்திய மாநில அரசுகள் சரிவர நிறைவேற்றவில்லை.
நான் இரண்டாவது முறையும் குடியரசுத்தலைவராக வரவேண்டுமென்று கம்யூனிஸ்ட் கட்சியினர் விருப்பம் தெரிவித்தனர். காங்கிரசும் அதற்கு ஒப்புக்கொண்டது.
அதனால் அனைத்துக்கடசிகளும் ஒரு மனதாக என்னைத்தேர்ந்தெடுப்பதாக இருந்தால் மட்டும் நான் சம்மதிக்கிறேன் என்று அவர்களிடம் சொன்னேன். 
நான் மீண்டும் 
குடியரசுத்தலைவராவதை பா.ஜ.க.வினர் விரும்பவில்லை.
 அவர்களுடைய மறைமுக திட்டத்திற்கு (ஆர்.எஸ்.எஸ். வகுத்துக்கொடுத்துள்ள ஹிடன் அஜண்டா) நான் குறுக்கே நிற்பதாக அவர்கள் அஞ்சினர். 
பா.ஜ.க அரசுகல்வி உள்ளிட்ட பல துறைகளில் தனது ரகசியத்திட்டங்களை செயல்ப்படுத்த முனைந்தது. தங்களுடைய ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை பரப்ப கல்வியை பயன்படுத்துவதுதான் அவர்களுடைய அன்றைய நோக்கம்.அது இந்திய வரலாற்றையே மாற்றி இந்துத்துவா வெறியர்களை தேச பற்றாளர்களாக,தியாகிகளாக காட்டும் கல்வி திட்டம்.
 முரளி மனோகர் ஜோஷி அவர்களுடைய ஆர்.எஸ்.எஸ் சார்பாளர்களை  பல்வேறு துணைவேந்தர்களாக நியமித்த நியமனத்தில் நான் தலையிட்டு தடுத்ததை  அவர் கடுமையாக எதிர்த்தார். 
என்னுடைய தலையீடு சட்டத்திற்கு உட்பட்டு ஜனநாயக ரீதியானது. 
அனைத்துக்கும் மேலாக மதசார்பின்மையே என்னுடைய நோக்கமாக இருந்தது."
        இன்றைய பாஜக முன்னிறுத்தும் குடியரசுத்தலைவர் வேட்பாளர் முழுக்க நனைந்த ஆர்.எஸ்.எஸ்,தொண்டர்.கல்வியை காவி மயமாக்கி நாட்டையும் காவி நிறத்தில் உலக வரைபடத்தில் காட்ட முயற்சிக்கும் பாஜகவின் இந்துத்துவா வெறிக்கு லாலு,நிதிஷ் குமார்,சந்திரசேகர்,மற்றும் அம்மா அதிமுகவும்,ஆத்தா அ திமுகவும்  விழுந்தடித்துக்கொண்டு ஆதரவு தருவது நாட்டை புதைகுழிக்குள் தள்ளும் செயல்.
ஆனால் நம் காலத்தின் கட்டாயம் குற்றவாளிகளை அரசியல் தலைவர்களாக வைத்திருப்பதுதான்.
அவர்கள் தங்களை வழக்குகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள பாஜக காலில் வீழ்ந்து ,மோடி காலை கழுவிக் குடிக்கிறார்கள்.
ஒரு கவுன்சிலை கூட வைத்திருக்காத வெறும் நடிகர் விஜயின் பிறந்த நாளுக்கு வாழ்த்துசெய்தி அனுப்புகிறார் பாஜக வேட்பாளர் ராம்நாத் என்றால் அவர்கள் எப்படியும் வெல்ல வேண்டும் என்பதற்காக எந்த அளவும் செல்வார்கள் என்றுதானே பொருள்.நாட்டை குட்டிசுவராக்கும் ஒரு ஆர்.எஸ்.எஸ்.கார  பிரதமரை வைத்திருக்கும் இந்தியாவுக்கு ஆர்.எஸ்.எஸ்.காரரே குடியரசுத்தலைவரா?
நாட்டை  அந்த பாரத மாதாவாலும் காப்பாற்ற முடியாது.இந்தியா இன்னொரு எத்தியோப்பியாதான்.








சனி, 17 ஜூன், 2017

வெற்றி இலக்கை அடைய

சுலபமான 5 வழிகள்! 
ஒரு ஈசியான வழி இருக்கிறது. எப்போதும் எடுக்கும் முயற்சியைவிட, கூடுதலாக நீங்கள் கடுமையாக உழைத்தால் வெற்றிக்கு அருகில் நீங்கள் சென்று விடுவீர்கள். உங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற தீவிரமாக உழைக்கவேண்டும். உழைப்பின்றி வெற்றிக்கனி கிடைப்பதென்பது நிஜத்தில் சாத்தியமற்றது.
உங்களை வெற்றிப் பாதையில் கொண்டு செல்லும் 5 சுலபமான வழிகள் இதோ!
 முக்கிய கேள்விகளை உங்களிடமே நீங்கள் கேளுங்கள்
உங்கள் கனவை நோக்கிய பயணம் ஏன் இத்தனை முக்கியமானது என்று கேட்டுக் கொள்ளுங்கள். லாபத்தை காட்டிலும் உயரிய குறிக்கோளை கொள்ளவேண்டும். சமூகத்தில் உங்கள் ஐடியா ஏற்ப்படுத்தப் போகும் மாற்றம் என்ன என்று சிந்தியுங்கள். சமூகத்தில் நீங்கள் ஒரு நேர்மறை தாக்கத்தை விட்டுச்செல்லப் போகிறீர்கள் என்ற நினைப்பே உங்களுக்கு ஊக்கத்தை கொடுத்து உந்துதலை அளிக்கும். உங்களின் கடின உழைப்பின் பலனை உணர்ந்தால் நீங்கள் செய்யும் வேலை சுலபமாக தெரியும், அதனோடு உங்களுக்கு நெருக்கமும் கிட்டும்.
உங்கள் முன்னேற்றத்தை அளவிடும் செயற்திட்டத்தை உருவாக்குங்கள்
எத்தனை கடுமையாக உழைத்தாலும், உங்களின் முன்னேற்றத்தை பற்றி அறியாமல் இருந்தால் அது அர்த்தமற்றதாக ஆகிவிடும். உங்களின் இலக்கு, அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் பணியை முடிக்கும் கெடுநாள் ஆகியவற்றை தெளிவாக வரையறுங்கள். இந்த திட்டம் ரெடி ஆனவுடன், பணியை தொடங்குங்கள். ஒரு ஐடியா முழுதும் நிறைவு பெறாமல் அடுத்தவற்றுக்கு தாவாதீர்கள். 
தொழில் நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள்
தொழிலில் ஏற்கனவே வெற்றி அடைந்தவர்களுடன் தொடர்பில் இருங்கள். போராடி வென்றவர்கள் பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்து உங்களுக்கு உதவி செய்து முன்னேற்றத்திற்கான வழியை சொல்வார்கள். அதே போல் உதவி தேவைப்படும் பிறருக்கும் நீங்கள் உதவிடுங்கள். மற்றவர்களின் வாழ்வின் வளர்ச்சிக்கு நீங்கள் எவ்வாறு உதவிட முடியும் என்று பார்த்து நடந்துகொண்டு, ஒரு நல்ல உறவுமுறையை உருவாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் சுயநலமாக இருந்து உங்களைப் பற்றி மட்டும் யோசித்தால், மற்றவர்களும் அதேபோல் உங்களிடம் இருப்பார்கள் என்பதை மறவாதீர்கள். 
உங்களுக்கான நேரத்தை ஒதுக்கிடுங்கள்
உங்கள் வேலை பலு அதிகமாக இருக்கும். ஆனால் அதற்காக உங்களின் நேரத்தையும் தொழில், பணிக்கு மட்டுமே செலவிடுவது நல்லதல்ல. குடும்பம், நண்பர்கள் என்று அவருகளுடனான உங்கள் நேரத்தை திட்டமிட்டு ஒதுக்குங்கள். அதே போல் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கான உடற்பயிற்சி, யோகா, புத்தகம் படிப்பது, சினிமா என்று நீங்கள் விரும்பிய ஒன்றை செய்ய தவறாதீர்கள். அதுவே உங்களை புத்துணர்வாக்கி செய்யும் வேலையை சிறப்பாக செய்ய உதவிடும். 
உங்களின் முக்கிய இலக்கை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்
நீங்கள் தொடங்கிய முக்கிய இலக்கை எப்போதும் மறவாமல் அதை அடையவே உழைத்திடுங்கள். வாழ்க்கையில் வெற்றி பெற இதுவே மிகமுக்கியம். உயரிய இலக்கை அடைய மூன்று வழிகளை எழுதிவைத்து அதை ஒவொன்றாக நிறைவேற்றிடுங்கள். அதே போல் ஒவ்வொரு நாளும் அதே ஊக்கத்துடன், குறிக்கோளுடன் செயல்பட்டால் மட்டுமே அந்த இலக்கை நீங்கள் நெருங்கமுடியும். 
வாழ்க்கைக்கான அர்த்தத்தை புரிந்து கொண்டு தெளிவாக வகுத்துக்கொண்டு வாழ்ந்தால் மட்டுமே உங்கள் கனவு நிறைவேற வழி கிடைக்கும். உற்சாகமாக மேற்கூறிய வழிகளை பின்பற்றிப் பாருங்கள். வெற்றி நிச்சயம்!
                                                                                                                                    நன்றி:

புதன், 14 ஜூன், 2017

அருவருப்பான ஆட்சி


65 ஐஏஎஸ் அதிகாரிகளின் குமுறல்!


(1953-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் ஆன 91 வயது ஹர்மந்தர்சிங் உள்ளிட்ட ஓய்வு பெற்ற 65 மூத்த அதிகாரிகள் எழுதிய திறந்த மடல் இது).

நாங்கள் அனைவரும் ஓய்வு பெற்ற அதிகாரிகள். 
அகில இந்திய மத்திய பணிகளில் பல்வேறு காலங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். ஒரு குழு என்ற முறையில் எங்களுக்கு எவ்வித அரசியல் சார்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்தி விடுகிறோம். ஆனால் சார்பின்மை, நடுநிலை, அரசியலமைப்பின் மீது மாறாப்பற்று ஆகியவற்றை எங்கள் கொள்கையாகக் கொண்டிருக்கிறோம். நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் கவலையளிக்கும் செயல்களே எங்களை எழுதத் தூண்டியது.

இந்திய அரசியல் தளத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் ஏற்றுக் கொள்ள முடியாத தவறான நிகழ்வுகளைப் பற்றியதே இந்த திறந்த மடல். ஏன் இப்படி தவறாய் நடக்கிறது; குறிப்பாக இஸ்லாமியர்களை இலக்காகக் கொண்டு மதவெறுப்பு வளர்க்கப்படுவது அதிகரித்திருப்பதாய் தோன்றுகிறது. 

உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது மதவெறியைத் தூண்டும் வகையில் வெளிப்படையாக இடுகாட்டிற்கும், சுடுகாட்டிற்கும் எண்ணிக்கை ஒப்பிடப்பட்டு பேசப்பட்டது. 
வெவ்வேறு மதவிழாக்களுக்கு சமமாகத்தான் மின்சாரம் வழங்கப்பட்டதா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இவற்றுக்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை. 

அவை உண்மையுமில்லை. மதச்சிறுபான்மையினரைக் குறி வைத்து இறைச்சிக்கூடங்கள் தடை செய்யப்படுகின்றன. அவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது. இத்தகைய சகிப்பின்மை வன்முறைக்கு வித்திடுகிறது. 

அதிலும் குறிப்பாக மதரீதியான வெறுப்புகள் மேலோங்கிய பிரதேசத்தில் ஒரு உள்ளூர் தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கெதிராக அவர் வீட்டைத் தாக்குவதற்கு தூண்டி விடுகிறார். 
அந்தக் குடும்பமே அச்சுறுத்தப்படுகிறது.தங்களை சட்டத்தின் காவலர்களாக கருதிக் கொள்கிற - சட்டப்படி அதிகாரமற்றோரின் நடவடிக்கைகள்பெருகி வருகின்றன.

அவர் வீட்டில் மாட்டிறைச்சி இருந்தது என்ற சந்தேகத்தின் பேரில் ஒரு அக்லாக் கொல்லப்படுகிறார். ஒரு பெஹ்லூகான், இரண்டு பசுக்களை தன் ஊருக்கு கொண்டு சென்ற போது, தேவையான ஆவணங்களை தன்னிடம் வைத்திருந்தும், நடுத்தெருவில் அடித்தே கொல்லப்படுகிறார். 
ஜம்மு -காஷ்மீரில் நாடோடிகளாக கால்நடை வளர்ப்புத்தொழிலில் ஈடுபட்டவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு செல்லும்போது தாக்கப்படுகிறார்கள்.

தண்டனைச் சட்டம் இவற்றைப் பற்றிய கவலையின்றி ‘பசுக் காவலர்கள்’ செயல்படுகிறார்கள். அரசு இயந்திரங்களின் மறைமுகமான ஆதரவோடும் அல்லது தன்முனைப்பான தூண்டுதலோடும் இதைச் செய்வதாய் தெரிகிறது. வன்முறையில் ஈடுபடுவோர் உரிய முறையில் தண்டிக்கப்படுவதில்லை.
ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்குப் பதியும் கொடூரம் நிகழ்கிறது. சட்டத்திற்குப் புறம்பாக தங்களைச் சட்டத்தின் பாதுகாவலர்களாக பாவிப்பவர்கள் தாங்களே காவலர்களாகவும், நீதிபதிகளாகவும், தண்டனையை நிறைவேற்றுபவர்களாகவும் செயல்படுகிறார்கள்.

 இது சட்டத்தின், நீதிவழங்கு முறையின் மீதான அப்பட்டமான தாக்குதலாகும். இது சட்டத்தின் ஆட்சியையும், அரசியல் சாசனத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

ஏனெனில் அரசுதான் - அதன் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் மூலம்தான் - சட்டத்தை நிலைநிறுத்தும் உரிமை படைத்துள்ளது. 

சட்டத்தைத் தங்கள் கையிலெடுத்துக் கொண்டுள்ள ரோமியோ எதிர்ப்பு குழுக்கள் ஆண்-பெண் இணைந்து வெளியே சென்றால் - காதலனுடன் கைகோர்த்துச் சென்றால் பயமுறுத்தப்படுகிறார்கள். இந்து - முஸ்லிம் உறவுகள் அல்லது திருமணத்தை தடுக்கும் மிரட்டல்களே இவை. இத்தகைய இணைகளைத் துன்புறுத்த சட்டத்தில் இடமில்லை.


 குறிப்பாக தான் மோசமாக நடத்தப்படுவதாக பெண் புகாரளிக்காத பட்சத்தில் இதற்கு சட்டத்தில் இடமேதுமில்லை.ஹைதராபாத் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களும், ஆசிரியர்களும் தாக்கப்படுகிறார்கள்.

சமத்துவம், சமூகநீதி, சுதந்திரம் ஆகியவை பற்றி கேள்வி எழுப்பினாலே தங்களை சங்கடப்படுத்துவதாக கருதி அரசின் உதவியுடன் நிர்வாகங்கள் இத்தகைய தாக்குதலைத் தொடுக்கிறார்கள். ஜோத்பூரில் திட்டமிடப்பட்ட கல்வி குறித்த ஒரு துறை வல்லுநரின் நிகழ்ச்சி நிர்ப்பந்தத்தால் ரத்து செய்யப்பட்டது. அதற்கு ஏற்பாடு செய்த ஆசிரியர் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுகிறார். 

ஜோத்பூரில் நடந்தது போலவே வேறு பல இடங்களிலும் நடந்திருக்கிறது. கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கும் கூட விவாதங்களுக்கும் உரையாடல்களுக்கும் இரத்த நாளம் போன்றவை. அவை நெறிக்கப்படுகின்றன. 

ஏற்க மறுப்பதும் மாற்றுக்கருத்தும் தேச விரோதமாகவும் தேசத்துரோகமாகவும் கருதப்படுகிறது.
இத்தகைய அணுமுறைகள் கருத்து சுதந்திரம் மற்றும் எண்ணங்களை கருகிப் போகச் செய்துவிடும்.பல புகழ் வாய்ந்த தன்னார்வத்தொண்டு நிறுவனங்களும் சமூக இயக்கங்களும் சட்டத்தை மீறியதாக வழக்குகள் புனையப்படுகின்றன. 

மீறல்கள் உண்மையெனில் அவை கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
ஆனால் நாங்கள் அறிந்தவரை நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்ட நிறுவனங்கள் அரசின் கொள்கைகளுக்கு எதிரான நிலையெடுத்தார்கள். தங்கள் ஆட்சேபனையை தெரிவித்தார்கள் அல்லது அரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நின்றார்கள் என்பதற்காகவே வழக்கை எதிர்கொள்கிறார்கள்.

ஆதிக்க கருத்தியலோடு ஒத்துப்போக மறுக்கிறார்கள் என்பதற்காகவே செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் தேடித்தேடி அவமானப்படுத்தப்படுகிற, மிரட்டப்படுகிற, சமூக வலைத்தளங்களில் கொலை மிரட்டலுக்கு உள்ளாகிற அருவருக்கத்தக்க போக்கை காணமுடிகிறது.

 இது கருத்துச்சுதந்திரத்தோடு பொருந்திப்போவதுதானா?

அடாவடி தேசியவாதம் வளர்ந்து வருகிறது. தேசபக்தன் இல்லையெனில் தேசவிரோதி என்பதாக எல்லாவித விமர்சனங்களையும் சுருக்கி விடுகிறது. 

நீங்கள் அரசாங்கத்தோடு இல்லையென்றால் தேசவிரோதி என்கிறது. அதிகாரத்தில் உள்ளோரை கேள்வி கேட்கக்கூடாது;

அதுதான் வெளிப்படையான செய்தி.பெரும்பான்மைவாதமும், எதேச்சதிகாரமும் வளர்ந்து வரும் நிலையில் அது தர்க்கப்பூர்வமான விவாதத்தை மறுக்கிறது. 

விவாதத்தை, மாற்றுக்கருத்தை மறுக்கிறது. பொது அதிகாரத்தில் உள்ளோர், பொதுநிறுவனங்கள், அரசியலமைப்பு நிறுவனங்கள் அனைவரிடமும் நாங்கள் வேண்டிக் கொள்கிறோம். 
கவலையளித்திடும் இந்த போக்குகளை கவனியுங்கள், 

அதை சரிப்படுத்துங்கள்

.நமது தேசத்தை உருவாக்கிய தலைவர்களின் நோக்கத்திற்கேற்ப இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் ஆன்மாவை மீட்டெடுங்கள்; 

பாதுகாத்திடுங்கள்!
தமிழில்: க.கனகராஜ்நன்றி : தி வயர் இணைய இதழ்

சனி, 10 ஜூன், 2017

மக்கள் நலனுக்குக் கேடுதரும்மரபணு மாற்றப்பட்ட கடுகை

 விரட்டியடிப்போம்

மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கான ஒப்புதல் அளிக்கும் குழு (Genetic Engineering Appraisal Committee - GEAC) 11.5.2017 அன்று மரபணு மாற்றப்பட்ட கடுகிற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக அறிவித் துள்ளது. நடுவண் அரசின் சுற்றுச்சூழல் அமைச்ச கத்தின்கீழ் இக்குழு இயங்குகிறது. அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்துவிட்டதாகவும், சுற்றுச்சூழல் அமைச் சரின் ஒப்புதல் கிடைத்ததும் மரபணு மாற்றப்பட்ட கடுகு உழவர்கள் பயிரிடுவதற்காக விற்பனையில் கிடைக்கும் என்றும் இக்குழு தெரிவித்துள்ளது. அந் நிலையில் இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட முதலாவது உணவுப் பயிராக கடுகு இருக்கும்.
மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கான ஒப்புதல் வழங்கும் குழுவின் தலைவர் அமிதா பிரசாத், “மரபணு மாற்றப்பட்ட கடுகு பயிரை வயல்களில் பயிரிடுவதற்காக அனுமதிக்குமுன், மனித உயிருக்குப் பாதுகாப்பானதுதான் என்பதை உறுதிசெய்துள்ளோம். இந்தியா போன்ற நாட்டின் உணவுத் தேவைகளை ஈடுசெய்ய மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் இன்றியமையாதவை களாக இருக்கின்றன. இந்தக் கடுகு 30 விழுக்காடு கூடுதல் விளைச்சல் தரவல்லது” என்று கூறியிருக் கிறார்.
கடுகு இந்திய உணவில் தவறாமல் இடம்பெறும் பொருளாகும். வடஇந்தியாவில் சமையல் எண்ணெய் யாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியா தற்போது தன் சமையல் எண்ணெயின் தேவையில் 50 விழுக் காட்டை ஆண்டுதோறும் இறக்குமதி செய்கிறது. இறக்கு மதி செய்யப்படும் எண்ணெய்யில் 90 விழுக்காடு பாமாயில் எனப்படும் செம்பனை எண்ணெய் ஆகும். எனவே மரபணு மாற்றப்பட்ட கடுகைப் பயிரிடுவதின் மூலம் அதிக விளைச்சல் பெறுவதுடன் வெளிநாடுகளி லிருந்து சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படு வதைக் குறைக்கலாம்; அந்நியச் செலாவணியும் குறை யும் என்று மரபணு மாற்றப்பட்ட கடுகின் ஆதரவா ளர்கள் கூறுகின்றனர். கடுகின் விளைச்சலை உயர்த் திட இதுதவிர வேறு வழி இல்லையா?
உலக அளவில் ஒரு எக்டரில் கடுகு பயிரில் அதிக விளைச்சல் பெறும் முதல் 5 நாடுகளான செருமனி, பிரிட்டன், பிரான்சு, செக்குடியரசு, போலந்து ஆகிய நாடுகளில் மரபணு மாற்றப்பட்ட கடுகு பயிரிடப்படு வதில்லை.
I.  மரபணு மாற்றப்பட்ட கடுகு பயிரிடப்படாத நாடுகளில் கடுகு உற்பத்தி - கிலோ/எக்டர்
1.            செருமனி     3786
2.            பிரிட்டன்      3477
3.            பிரான்சு         3370
4.            செக் குடியரசு          3157
5.            போலந்து     2708
6.            உக்ரைன்      2106
7.            ருமேனியா 2067
8.            சீனா  1871
9.            இந்தியா        1196
II. மரபணு மாற்றப்பட்ட கடுகு பயிரிடப்படும் நாடுகளில் கடுகு உற்பத்தி - கிலோ/எக்டர்
1.            கனடா             1953
2.            அமெரிக்கா (U.S.A.) 1780
3.            ஆஸ்திரேலியா     1277
(புள்ளிவிவர ஆதாரம் : உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு - FAO)
மேலே உள்ள புள்ளிவிவரம் மரபணு மாற்றப்பட்ட கடுகைப் பயிரிடாத நாடுகளில்தான் உற்பத்தித்திறன் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது என்கிற உண்மையை உணர்த்துகிறது. 
மேலும் இப்பிரிவில் இந்தியாவின் உற்பத்தி எக்டருக்கு 1196 கிலோவாக இருப்பதை செருமனி, பிரிட்டன், பிரான்சு முதலான நாடுகளில் பின்பற்றப்படும் வேளாண் முறைகளைக் கடைப்பிடித்து உற்பத்தியைப் பெருக்காமல், மரபணு மாற்றப்பட்ட கடுகுதான் உற்பத்தியை உயர்த்துவதற் கான ஒரே வழியாக இந்தியா தேர்ந்தெடுத்தது ஏன்? 
மரபணு மாற்றறப்பட்ட கடுகைப் பயிரிடும் நாடுகளின் விளைச்சல் குறைவாக உள்ளபோதிலும், இந்த வழி முறையைத் தேர்வு செய்வதற்கான காரணம் அமெரிக் காவின் பன்னாட்டு நிறுவனங்கள் தரும் அழுத்தமே ஆகும்.
2002ஆம் ஆண்டில் பன்னாட்டு நிறுவனமான பேயர் (Bayer) உருவாக்கிய மரபணு மாற்றப்பட்ட கடுகை நடுவண் அரசின் ஒப்புதல் வழங்கும் குழு (GEAC) தள்ளுபடி செய்தது. 2010ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் பன்னாட்டு நிறுவனமான மான்சாண்டோ உருவாக்கிய மரபணு மாற்றப்படட கத்தரிக்கு இக்குழு ஒப்புதல் வழங்கியது. இந்தியாவில் நிலவும் பல்வேறுபட்ட தட்பவெப்பச் சூழல், மண்வளம் ஆகியவற்றுக்கு ஏற்ப 2200 வகையான கத்தரிக்காய்கள் பயிரிடப்படுகின்றன. 
மரபணு மாற்றப்பட்ட (Bt) பருத்தி வந்தபின், நாட்டு வகைப் பருத்திகள் அழிந்ததுபோல், பி.டி. கத்தரியால் நாட்டு இரக கத்தரிகளும் அழிந்துவிடுமோ என்ற அச்சத்தால் உழவர்கள் பி.டி. கத்தரிக்குக் கடும் எதிர்ப் பைத் தெரிவித்தனர். சமூக ஆர்வலர்களும் கடுமையாக எதிர்த்தனர். 
அப்போது சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெயராம் ரமேஷ் இந்தியாவின் பல பகுதிகளில் உழவர்கள் கருத்தறியும் கூட்டங்கள் நடத்தினார். இறுதியில் பி.டி. கத்தரி கைவிடப்பட்டது. இப்போது பி.டி. கடுகு வந்துள்ளது.
பி.டி. பருத்தி, பி.டி. கத்தரி, பி.டி. கடுகு என்ப வற்றில் உள்ள “பி.டி.” (Bt) என்பது என்ன? மண்ணில் பேசிலஸ் துரிஞ்சியன்சிஸ் (Bacillus Thuringiensis) எனும் பாக்டீரியா வாழ்கிறது. அவற்றில் உள்ள ஜீனைப் (gene) பிரித்தெடுத்து பருத்திச் செடியுடன் ஆய்வுக்கூடத் தில் இணைக்கின்றனர். இதுவே மரபணுப் பொறியி யல் (Genetic Engineering) எனப்படுகிறது. இந்த பாக்டீரியாவின் ஆங்கிலப் பெயரின் சொற்களில் உள்ள முதல் எழுத்துகளான ‘க்ஷ’, ‘வ’ ஆகியவற்றை எடுத் தாண்டு பி.டி. (க்ஷவ) என்ற முன்னொட்டு சேர்க்கப்பட்டது.
பேசிலஸ் துரிஞ்சியன்சிஸ் பாக்டீரியாவிலிருந்து எடுக்கப்பட்ட புரதப் பொருளான ஜீன் சேர்க்கப்பட்ட பருத்திப் பயிரில் உண்டாகும் காய்களைப் புழுக்கள் சேதப்படுத்துவதில்லை என்று கூறப்பட்டது. அதாவது பி.டி. ஜீன் இருப்பதால் அதன் வேதிப்பொருள் காரண மாக காய்ப்புழுக்கள் அதை உண்ணாமல் விலகிச் செல்கின்றன. சாதாரண இரக பருத்திப் பயிரில் பருத் திக் காய்களுக்குள் புழுக்கள் நுழைந்து தின்பதால் பருத்தி உற்பத்தி குறைவதுடன், அதன் தரமும் குறைகிறது. 
எனவே பி.டி. பருத்தியைப் பயிரிட்டால் பூச்சி மருந்து தெளிக்க வேண்டியதில்லை; பருத்திக் காய்களைப் புழுக்கள் தாக்குவதில்லை; அதனால் தரமான பருத்தியும், அதிக விளைச்சலும் கிடைக்கிறது; ஆகவே உழவர்கள் அதிக இலாபம் பெறுவார்கள் என்று பரப்புரை செய்யப்பட்டு, மான் சாண்டோ நிறு வனத்தின் பி.டி. பருத்தியை உழவர்கள் பயிரிட நடுவண் அரசு அனுமதித்தது.

பி.டி. பருத்தி அறிமுகமான சில ஆண்டுகளில் அதிக விளைச்சல் கிடைத்தது. காய்ப்புழுவின் தாக்குத லும் குறைவாக இருந்தது. அதனால் பருத்தி பயிரிடப் பட்ட மொத்த பரப்பில் பி.டி. பருத்தி 95 விழுக்காடு இடத்தைக் கைப்பற்றிக் கொண்டது. ஆனால் உழவர் களின் விதை உரிமை முற்றிலுமாகப் பறிக்கப்பட்டது.
 ஒவ்வொரு முறையும் மான்சாண்டோ நிறுவனத்திட மிருந்து அதிக விலையில் பி.டி. பருத்தி விதைகளை உழவர்கள் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். 
ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் பி.டி. பருத்தியிலும் காய்ப்புழுவின் தாக்குதல் ஏற்பட்டது. உழவர்கள் பல தடவைகள் பூச்சி மருந்து தெளிக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டனர். விளைச்சல் குறைந்தது. பி.டி. பருத்தியின் இலைகளைத் தின்ற கால்நடைகள் மாண்டன.
இதுகுறித்து 1990களில் நடுவண் அரசின் ஜவுளித் துறையின் செயலாளராக இருந்த டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் 25.5.2017 அன்று “தி இந்து” - ஆங்கில நாளேட்டில் எழுதியுள்ள கட்டுரையில், “பூச்சி மருந்து தெளிப்பது தவிர்க்கப்படுவதால், செலவு குறை வதுடன் உற்பத்தி அதிகமாகும் என்கிற கூற்றை நானும் நம்பி பி.டி. பருத்திக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 
ஆனால் எதிர்பார்த்த பயன்கள் பொய்யாகிவிட்டன என்பதை இப்போது உணருகிறேன். கூடுதலாக நீர்ப்பாசனம், உரங்கள் அளித்தபோதிலும் எதிர்பார்த்தவாறு அதிக விளைச்சல் கிடைக்கவில்லை. இந்தியாவைவிட ஒரு ஏக்கரில் அதிக பருத்தி மகசூல் எடுக்கும் பெரும்பாலான நாடுகள் பி.டி. பருத்தியைப் பயன்படுத்துவதில்லை. பி.டி. பருத்தி குறித்து பல உண்மைகள் நமக்கு மறைக் கப்பட்டன. எதிர்காலத்தில் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த உண்மை விவரங்களை அறிய நேர்ந்திருந்தால், பி.டி. பருத்தி இந்தியாவுக்குள் நுழைந் திருக்காது” என்று எழுதியுள்ளார்.
பி.டி. பருத்திக்கே இந்த நிலையெனில், நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் கடுகு, பி.டி. கடுகாக மாறுவது குறித்து இன்னும் பல மடங்கு விழிப்புடன் இருக்க வேண்டும்.
பி.டி. பருத்தி, பி.டி. கத்தரி ஆகியவை காய்ப்புழுவின் தாக்குதலைத் தவிர்க்கும் ஆற்றல் பெற்றவை என்று கூறப்பட்டது. ஆனால் பி.டி. கடுகிலோ, கொடிய நச்சுத் தன்மையைக் கொண்ட களைக்கொல்லி மருந்துகளை வயலில் தெளிக்க வேண்டியது கட்டாயமாகும். களைக் கொல்லி மருந்துகளின் (Herbicide) கொடிய நஞ்சு மனிதர்களையும், சுற்றுச்சூழலையும் கடுமையாகப் பாதிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
களைகளை வளரவிடாமல் செய்வதன் மூலம் அதிக விளைச்சல் பெறுவதே பி.டி. கடுகின் குறிக்கோள். களைக்கொல்லி மருந்துகளைத் தெளித்தாலும் அதன் நச்சுத்தன்மையைத் தாங்கும் (herbicide tolerant) வல்லமை உடைய பி.டி. ஜீன்களைக் கொண்டவை பி.டி. கடுகு என்று கூறப்படுகிறது.
கிளைபாஸ்பேட் (Glyphosphate) எனும் வேதிப் பொருளை அடிப்படையாகக் கொண்டே களைக்கொல்லி மருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த கிளைபாஸ்பேட் வேதிப்பொருள் சிறுநீரக பாதிப்பு, நீரிழிவு நோய், மறதி நோய், புற்றுநோய் ஆகியவற்றை அதிகரிக்கும் என்று அமெரிக்காவில் பி.டி. பயிர்கள் குறித்து கடந்த இருபது ஆண்டுகளில் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட் டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் (WHO) “கிளை பாஸ்பேட்” மனிதர்களிடம் புற்றுநோயை உண்டாக்கும் என்று அறிவித்துள்ளது. அதனால்தான் கிளைபாஸ்பேட் வேதிப்பொருளை அடிப்படையாகக் கொண்ட களைக் கொல்லி மருந்துகளைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ற நிலையில் உள்ள பி.டி. கடுகை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்று மருத்துவ வல்லுநர்களும், சமூக செயற்பாட்டாளர்களும், உழவர் களும் எதிர்க்கின்றனர்.
அமெரிக்காவில் 20 வகையான களைகள் கிளைபாஸ் பேட்டை அடிப்படையாகக் கொண்ட களைக்கொல்லி மருந்துகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. தொடர்ந்து இக்களைகளைக் கட்டுப்படுத்த 16 ஆண்டுகளில் இம் மருந்தை பத்து மடங்கு அதிகமாகத் தெளிக்க வேண்டும். அதனால் அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்கள், களைக்கொல்லி மருந்துகளை உலகம் முழுவதும் விற்று, கொள்ளை இலாபம் ஈட்ட, களைக்கொல்லி சார்ந்த பி.டி. விதைகளைப் பயிரிடுமாறு பலவழிகளைக் கை யாண்டு வருகின்றன.
அண்மையில் உலகின் பெரும் பன்னாட்டு நிறுவனங்களான மான்சாண்டேவும் பேயரும் (Bayer), டோவ் (Dow)ம், டுபாண்ட்டும் (Dupon), சைஜென் டாவும் சைனிஸ்செம்பும் இணைந்தன. இந்நிறுவனங்களிடம் உலகின் பூச்சிமருந்து விற்பனையில் 65 விழுக்காடும், விதை விற்பனையில் 61 விழுக்காடும் உள்ளன. இவைதான் உலகின் விதை - பூச்சிமருந்து சந்தையை ஆட்டிப்படைக்கின்றன. 
அமெரிக்காவின் புகழ்பெற்ற அயலுறவுத் துறை அமைச்சராக இருந்த ஹென்றி கிஸ்ஸிங்கர், “கச்சா எண்ணெயை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டால், தேசங்களை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடலாம்; உணவுப் பொருள்களை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால், உலகில் வாழும் மக்களை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம்” என்று ஒருமுறை கூறியதைப் பன்னாட்டு நிறுவனங்களின் விதை-பூச்சி மருந்து ஆதிக்கத்துடன் இணைத்து எண்ணிப் பாருங்கள்.
பா.ச.க. 2014 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில், “மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், அறிவியல் ஆராய்ச்சி அடிப்படையில், நீண்டகாலப் போக்கில் மண், உற்பத்தி, நுகர்வோரின் உடல்நலன் ஆகியவற்றில் எத்தகைய கேடான விளைவையும் ஏற்படுத்தாது என்பதை உறுதி செய்த பிறகே அனுமதிக்கப்படும்” என்று கூறியிருந்தது.
பன்னாட்டு நிறுவனத்தின் பி.டி. பயிராக இருப்பின் எதிர்ப்பு ஏற்படும் என்பதால் ‘சுதேசி’ பி.டி. கடுகைக் கொண்டுவர உள்ளது. னுஆழ-11 எனப்படும் பி.டி. கடுகு தில்லிப் பல்கலைக்கழகத்தில் முன்னாள் துணைவேந்தர் தீபக் பென்தால் தலைமையில் நடுவண் அரசின் நிதி ஒதுக்கீட்டுத் திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. ‘தேசியம்’, ‘தேசபக்தி’ என்கிற பெயர்களால் எதிர்ப்பு களை பா.ச.க.வின் மோடி அரசு ஒடுக்கி வருவதுபோல் ‘சுதேசி’ பி.டி. கடுகு என்ற பெயரால் எதிர்ப்புகளை அடக்கிவிடலாம் என்று நினைக்கக்கூடும். சுதேசி பி.டி. கடுகானாலும் பன்னாட்டு நிறுவனத்தின் பி.டி. கடு கானாலும் அதனால் ஏற்படக்கூடிய கேடுகளில் மாற்றம் இல்லை. சுதேசி பி.டி. கடுகான - னுஆழ-11 என்பதற் கும் கிளைபாஸ்பேட்டை அடிப்படையாகக் கொண்ட களைக்கொல்லி மருந்தைக் கட்டாயம் தெளிக்க வேண் டும். எப்போதும் களைக்கொல்லி மருந்து பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். மேலும் சுதேசி பி.டி. கடுகு பயிரிட அனுமதிக்கப்படும் போது, “அரசு-தனியார் கூட்டு” என்ற பெயரில் இந்த விதை தயாரிப்பு உரிமை தனியார் நிறுவனத்திடம் தரப்படும்.
சமையல் எண்ணெய்யின் இறக்குமதியைக் குறைக்க, கடுகின் விளைச்சலைப் பெருக்க என்பன போன்ற போலியான முழக்கங்கள் மூலம் பி.டி. கடுகைப் பயிரிட அனுமதிப்பது எவ்வளவு அடாவடித்தனமானது என் பதை மேலே தரப்பட்டுள்ள விவரங்கள் மூலம் தெளிவு படுத்தி உள்ளோம்.
பி.டி. கடுகு கொடிய நச்சுப் பொருள்களைக் கொண்டது. நுகர்வோரான 125 கோடி மக்களின் உடல்நலனுக்குப் பலவகையிலும் ஊறுவிளைவிப்பது ஆகும். உழவர் களின் விதை உரிமையைப் பறிக்கிறது. ஒவ்வொரு முறையும் அதிக விலையில் கடுகு விதையையும், களைக்கொல்லி மருந்தையும் தனியாரிடம் உழவர்கள் வாங்க வேண்டும். எனவே இது தனியார் மயக் கொள்ளைக்கு துணைபோவதாகும். நச்சுத்தன்மை மிக்க களைக்கொல்லி, சூழலை மாசுபடுத்தும். பல உயிர்களுக்கும் நஞ்சாக அமையும்.
உலகில் உள்ள 190 நாடுகளில் 17 நாடுகளில் மட்டும் உலகில் உள்ள தாவர, விலங்கு உயிரினங்களில் 70 விழுக்காடு உள்ளன. இந்த 17 நாடுகளில் இந்தியா முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவில் இரண்டு இலட்சம் நெல் இரகங்கள் இருந்தன. பசுமைப் புரட்சி என்ற பெயரால் இவற்றில் பெரும்பகுதி அழிந்துவிட்டன. உயிர்ப்பன்மயத்துக்கும், விதைப்பன்மயத்துக்கும் முதல் எதிரியாக உள்ள பி.டி. கடுகு போன்றவற்றை முளையிலேயே கிள்ளி எறிதல் போல், நுழையவிடாமல் தடுத்திட வேண்டியதும் அதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதும் நமது கடமையாகும்.
                                                                                                                                             க.முகிலன்

ஞாயிறு, 4 ஜூன், 2017

ஜெனரிக் மருந்து- சில கேள்விகள்

குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மக்களின் வசதிக்காகவும், அவர்கள் தெரிந்து கொள்ளும் வண்ணமும் மருத்துவர்கள் இனிமேல் ஜெனரிக் மருந்துகளை மருந்துச் சீட்டில் (பரிந்துரை சீட்டு) எழுதவேண்டும் என பிரதமர் மோடி அறிவித்தார். 

அதனை தொடர்ந்து இந்திய மருத்துவக் கழகம் பிரதமரின் யோசனையை வழிமொழிந்தது. இது மருந்துத் துறையில் மக்களை பாதுகாக்க வந்த மற்றுமொரு துல்லியத் தாக்குதல் என மோடி பாராட்டப்பட்டார். 

தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவும் மோடியின் இந்த கோரிக்கை அறிவிப்பு இந்திய மருத்துவத் துறையின் முக்கியமான திருப்பம் என வருணித்தார். இதை தொடர்ந்து மருத்துவர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்தனர். 
குழப்பங்கள் உருவாயின. 

பல காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் இப்பிரச்சனையை விவாதப் பொருளாக்கின. நிற்க. மோடியின் அறிவிப்பு நல்லெண்ணத்துடன் சொல்லப்பட்டதா? 

அல்லது அரசியலா? 

என்பதை அறியும் முன்னர் இந்திய மருந்துத் துறையின் ஆரம்ப காலம், வளர்ச்சி குறித்து அறிந்து கொள்வது அவசியம்.

பாதையும் வளர்ச்சியும்...
இந்தியாவில் சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னர் பன்னாட்டு நிறுவனங்கள் தான் மருந்துகளை இறக்குமதி செய்து, வியாபாரம் செய்து பெரும் லாபம் அடைந்தனர். 
விடுதலைக்கு பிறகு சோவியத் யூனியன் உதவியோடு, ஐ.டி.பி.எல் நிறுவனமும், யுனெஸ்கோவின் உதவியோடு எச்.ஏ.எல். (HINDUSTAN ANIBIOTICS LIMITED) நிறுவனமும் துவங்கப்பட்டது. இந்த இரு நிறுவனங்களும் அதிக அளவில் மருந்துகளை உற்பத்தி செய்தன. 

குறிப்பாக மிக குறைந்த விலையில் அக்காலத்தில் தேவைப்பட்ட அடிப்படை மருந்துகளை சந்தையில் மிக குறைந்த விலையில் கொடுத்தன. இதன் காரணமாக பன்னாட்டு நிறுவனங்களும் தங்கள் மருந்துகளின் விலைகளை குறைத்தன.
அதோடு சேர்ந்து 1970 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட காப்புரிமைச் சட்டம், வழிமுறைக்கான காப்புரிமையை ஏற்றுக் கொண்டதால் ஏராளமான நிறுவனங்கள் மலிவு விலையில் மருந்துகளை உற்பத்தி செய்துஆரோக்கியமான போட்டியை உரு வாக்கின. 

அடுத்ததாக, ஜெய் சுக்லா ஹாத்திதலைமையிலான குழு கொடுத்த பரிந் துரைகள், குறிப்பாக தேவைக்கேற்ற உற்பத்தி,விலை கட்டுப்பாடு, அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் மருந்துகள் கிடைக்க வழிமுறைகள் என அனைத்தும் இணைந்து இந்திய மருந்துச் சந்தையை உச்சத்துக்கு கொண்டு சென்றன. இந்த அனைத்து நடவடிக்கைகளும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை வெகுவாக குறைத்து பின்னுக்கு தள்ளின.

இன்று 2017இல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு சந்தையின் மதிப்பு 1லட்சம் கோடி
யாகவும், ஏற்றுமதி சுமார் 70 ஆயிரம் கோடியாகவும் உயர்ந்துள்ளது. 
இந்த பிரம்மாண்ட சந்தையை, பின்னுக்கு தள்ளப்பட்ட பன் னாட்டு நிறுவனங்கள் எப்படி விடுவார்கள்? பன்னாட்டு நிறுவனங்களுக்கு உலக மாற்றங்கள் சாதகமாக இருந்தன. 

குறிப்பாக உலகமயமாக்கல், அதன் நீட்சியாக சுதந்திர வர்த்தகம், உலக வர்த்தக நிறுவனத்தின் ஒப்பந்தங்கள் என அனைத்து ஒப்பந்தங்களும் ஒவ்வொன்றாக தொடர்ந்தன.
 சொல்லவே வேண்டாம். அனைத்தும் நம் நாட்டின் சுயசார்புக்கு எதிராகவே இருந்தது.

தீர்மானிக்கும் பிரதான பிரச்சனை
இன்று விவாதிக்கப்படும் மிக முக்கியமான மையக்கரு ஜெனரிக் மருந்துகளின் விலை மிகவும் குறைவு, ஆனால் இன்று வர்த்தகப் பெயரோடு (BRANDED DRUGS) சந்தையில் விற்கப்படும் மருந்துகளின் விலைகள் அதிகம் எனும் விவாதம் கிளம்பியுள்ளது. உண்மை என்ன? காரணம் பல பத்திரிகைகளில் முழு விவரங்கள் இல்லாமல் மேலோட்டமாக, நுனிப் புல்லை மேய்ந்து கட்டுரைகள் எழுது கிறார்கள், இந்தியாவில் மருந்து விலைகளை தீர்மானிப்பது தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பான தேசிய மருந்து விலை

ஆணையம். இந்தியாவில் சந்தையில் அறி முகப்படுத்தும் அனைத்து மருந்துகளும் அம்மருந்தை உருவாக்க, உற்பத்தி செய்ய ஆகும் செலவுகள், மற்றைய செலவுகள் என அனைத்தையும் கணக்கில் கொண்டு விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன. அதே போல, மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணை
யம் (DRUG PRICE CONTROL ORDER) கட்டுப்பாட்டுக் குள் இருக்க வேண்டிய மருந்துகளின் விலையை தீர்மானிக்கும். 

கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டிய மருந்துகள் என்பது அடிப்படையில் மக்கள் நீண்ட நாட்களுக்கு, தீரா நோய்களுக்கு பயன்படுத்தும் மருந்துகள்.
தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் பல காரணிகளை கொண்டு விலைகளை தீர்மானிக்கிறது. அப்படி மருந்துகள் விலை அதிகபட்சமாக போகக் கூடாது எனும் உயர் விலையை அறிவித்த பிறகும் நிறுவனங்கள் அதை மீறுகின்றன. 

இது எப்படி சாத்தியம் என கேட்கலாம்? இந்தியாவில் எதுவும் சாத்தியம்….இங்கு சட்டங்களை மீறுபவர்களே அதிகம். இதற்கு சான்றுகளாக ஏராளமான தரவுகளைகொடுக்க முடியும். உதாரணமாக ரத்தஅழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும் மருந்து அம்லோடிபின் (AMLODIPINE). இந்த மருந்தின் அதிகபட்ச விற்பனை விலை ரூ.3.10ஆக இருக்கலாம் என தேசிய விலை நிர்ணய ஆணையம் முடிவு செய்துள்ளது. ஆனால் பல நிறுவனங்கள் கூடுதல் விலைக்குவிற்கின்றன. நம்மில் பலருக்கு உடனே
கேள்வி எழக்கூடும். 

ஜெனரிக் மருந்துகளாக இருந்தால் விலை குறையுமே? 
வர்த்தகப்பேரில் இருப்பதால் தானே இப்பிரச்சனை யெல்லாம். ஜெனரிக் மருந்துகள் மட்டும் இதற்கு தீர்வல்ல அது ஒரு அரசியல் சூழ்ச்சியின் துவக்கப் புள்ளி. 

இந்தியாவை தவிர உலகில் எந்த நாட்டிலும் வர்த்தகப் பெயரில் மருந்துகள் இல்லை என்பதை சொல்லி ஜெனரிக் மருந்துகளுக்கு ஆதரவாகவாதாடும் நண்பர்கள் வசதியாக பல விவரங்களை மறைக்கின்றனர். ஏனைய நாடுகளில் மருந்துகளின் விலையை விட இந்தியாவில் தான் மருந்துகளின் விலை குறைவு. காரணம் இங்கே வர்த்தகப் பேரில் மருந்துகள் இருப்பதால் மருத்துவர்கள் எது தன்னுடைய நோயாளிகளுக்கு பலன் தருமோ அதை எழுத வாய்ப்புள்ளது. 

ஆனால் மேலை நாடுகளில் ஜெனரிக் மருந்துகள் என ஒன்று மட்டும் தான் இருக்கிறது. 
ஆக மருந்துகள் எழுதுவதற்கு பின்னால் பல விவரங்கள் உள்ளன.

பன்னாட்டு சூட்சுமம்
இந்தியா பல பத்தாண்டுகளாக உலகமய மாக்கல் கொள்கைகளை முழு மூச்சாக நடைமுறைப்படுத்தி வருகிறது. எதிர் 2005 ஆம் ஆண்டு இந்தியாவில் காப்புரிமைச் சட்டத்தில் சட்ட மாற்றங்கள் நிறைவேற்றப்பட்டதால் மெல்ல மெல்ல மாற்றங்கள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. இவை அனைத்தும் கொள்கை முடிவுகளாக அரசுகளே எடுக்கின்றன. 

அதில் ஒன்று மருந்துத் துறை யில் 100சதவீத நேரடி அந்நிய முதலீடு. அனைத்துத் துறைகளிலும் நடைமுறையில் உள்ளது தானே! 
இது என்ன புதுசு என வினவலாம். மருந்துத் துறையில் 100 சதவீத அந்நியமுதலீடு செய்ய தற்போது மோடி அரசு அனுமதித்துள்ளது. 
இந்தியச் சந்தையின் தற்போ தைய மதிப்பு சுமார் ஒரு லட்சம் கோடியை தாண்டும். இவ்வளவு மதிப்புடைய சந்தையை பன்னாட்டு நிறுவனங்கள் விடுவார்களா? 

அரசுகளை தங்கள் கைப்பாவைகளாக மாற்றி தங்களுக்கு சாதகமாகச் சட்டம் இயற்றி கொள்ளை லாபம் அடிக்க முயற்சிக் கின்றனர். ஏற்கெனவே காப்புரிமைச் சட்டத் தின் விதிகளுக்கு உட்பட்டு பல புதிய, மருந்துகள் வரும் காலம். காரணம் நமது நாட்டில்ஆராய்ச்சி செய்து எந்த புது மருந்தும் கண்டு
பிடிக்கமுடியாத சூழலில், பன்னாட்டு நிறு வனங்கள் ஏறக்குறைய 300க்கும் அதிகமான புது மருந்துகளை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மருந்துகள் அனைத்துக்கும் மிக அதிகமான விலை நிர்ணயித்துள்ளனர்.
தற்போதைய சூழலில் எய்ட்ஸ், மன அழுத்தம், புற்று நோய், நீரழிவு, இரத்தக் கொதிப்பு உள்ளிட்ட பல வாழ்க்கைச் சூழலால்ஏற்படும் நோய்களே அதிகம் என்பதால் அதற்கேற்ப புது மருந்துகளை அறிமுகம் செய்ய காத்திருக்கிறது. இதற்கு தடையாக இருப்பது இந்தியாவில் உள்ள நடைமுறை. அதாவது வர்த்தகப் பெயரால் (BRAND NAMES) பரிந்துரைப்பது. 
அதை மாற்றினால் தடைகள் நீங்கும்.

விலை நிர்ணயம்
போலிக்கண்ணீர்
ஜெனரிக் மருந்துகள் விலை குறைவாக இருக்கும், ஆகவே மருத்துவர்கள் ஜெனரிக் மருந்துகளை எழுதவேண்டும் என மோடி அரசு சொல்வது மக்களின் நலன் கருதி அல்ல. 
பன்னாட்டு நிறுவன பாசம். இவர்களின் அரசு பதவியேற்றவுடன் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்களில் மருந்து வணிகத்தில் கட்டுப்பாடு இல்லா ஒப்பந்தம் முக்கியமானது. 

இதன் மூலம் இந்தியாவில் எவ்வித கட்டுப்பாடு இல்லாமல்( விலை உட்பட)விற்பதற்கான விதியும் ஒன்று. அது மட்டுமல்லாமல், காப்புரிமை சட்ட மாற்றங்களில் தளர்வு, இந்திய நிறுவனங்களுக்கு கண்டிப்பான விதிகள் என அனைத்தையும் விரைவில் ஒப்பந்தங்கள் செய்திட உள்ளன. 
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
பல உலக நாடுகள் இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளை தான் அதிகம் பயன்படுத்துகின்றன. விலையும் குறைவாக, தரமும் நிறைவாக இருக்கும் நமது தயாரிப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் மற்ற நாடுகளை பின்பற்றாமல், இந்தியாவை கொள்ளைக் காடாக மாற்ற நினைக்கும் மோடி பாஜக  அரசின் தந்திரத்தை என்ன சொல்வது?
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

உதாரணமாக, எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகளை சிப்லா நிறுவனம் மிக குறைந்த விலையில் தயாரித்து, மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு வழங்கி வருகிறது. இது பன்னாட்டு நிறுவனங்களுக்கு பெரும் தடையாக இருக்கிறது. நல்ல தரத்தில் ,குறைந்த விலையில் தருவது ஒரு இந்திய நிறுவனம் அதை சகிக்க முடியுமா?

ஆக, ஜெனரிக் மருந்துகள் என வந்து விட்டால், வர்த்தகப் பெயர் இருக்காது. புதிதாக அறிமுகம் செய்யும் மருந்துகள் அனைத்தையும் அதிக விலைக்கு விற்கலாம்.
மோடி அரசு பதவிக்கு வந்தவுடன் திட்டக்கமிஷனை கலைத்து விட்டு நிதி ஆயோக் அமைப்பை உருவாக்கியது. 

மக்கள் நலன் சார்ந்த பல விஷயங்களை அதில் விவாதிப்பதாக அவ்வப்போது அருண் ஜெட்லி சொல்கிறார். 

ஆனால் ஒரு முறை கூட மருந்துகளின் விலை குறைப்பை பற்றி பேசியதில்லை. மாறாக அது பற்றி சில முதல்வர்கள் கேள்வி எழுப்பினால், கொள்கை முடிவுகள் இங்கு பேசுகிறோம், மற்றவைகளை நாடாளுமன்றத்தில் பேசுகிறோம் என சொல்கிறார்கள்.
மற்றைய மேலை நாடுகளில் ஜெனரிக் மருந்துகள் தான் பயன்பாட்டில் உள்ளன. 

ஆகவே நாமும் மாறவேண்டும் என சொல்கிறது
அரசு. பல உலக நாடுகள் இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளை தான் அதிகம் பயன்படுத்துகின்றன. விலையும் குறைவாக, தரமும் நிறைவாக இருக்கும் நமது தயாரிப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் மற்ற நாடுகளை பின்பற்றாமல், இந்தியாவை கொள்ளைக் காடாக மாற்ற நினைக்கும் இந்த அரசின் தந்திரத்தை என்ன சொல்வது?

மேலை நாடுகளில் உள்ள அரசுகள் தங்கள் மக்களுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைக்க இந்திய கம்பெனிகளை நாடுகின்றன. 
ஆனால் மோடி அரசோ பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்க இலவச அனுமதி வழங்குகிறது.

ஜெனரிக் மருந்து தான் தீர்வா?
மருந்துகளை பொறுத்தவரை ஜெனரிக் மருந்துகள் எழுதப்படுவது நிரந்தரத் தீர்வு இல்லை. மருந்துகளை விலை குறைவாக விற்பதற்கு ஆக்கப்பூர்வமான பல்வேறு வழிகள் உள்ளன. குறிப்பாக மருந்துகளை உற்பத்தி விலைக்கே விற்க அரசு முயற்சி எடுக்கலாம். 
மருந்து விலை கட்டுப்பாட்டு விதிகளை மேலும் கடுமையாக்கிட வேண்டும். வரி விதிப்புகளை முறைபடுத்திட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

சமீபத்தில் இதய அறுவைச் சிகிச்சைக்கு தேவைப்படும் ஸ்டெண்ட் ( CORONARY STENTS )
கருவிகளுக்கான வரிகள் பெரும் போராட்டத்திற்கு பிறகு குறைக்கப்பட்டது. 

இந்த வரிகுறைப்பினால் பாதிப்படைந்தது பன்னாட்டு நிறுவனங்கள் தான். இப்போதும் பல பன்னாட்டு கம்பெனிகள் குறுக்கு வழி களை பின்பற்றி பழைய விலைக்கே விற்கமுயற்சிக்கின்றன. ஆக சட்டங்கள் கடுமை யாக இருந்தாலே தீர்வுகள் கிடைக்கும்.
மத்திய அரசு மக்கள் மருந்தகங்கள் எனும் பேரில் சில மருந்துக் கடைகளை திறந்துகுறைந்த விலையில் ஜெனரிக் மருந்துகள் கிடைக்கும் என அறிவிக்கை செய்கிறது. 

ஆனால், இங்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அனைத்து விதமான மருந்துகளும் கிடைப்பதில்லை. அதற்கான ஆக்கப்பூர்வ மான மாற்றுத் திட்டத்தை அரசு முன்வைக்க வில்லை.
எப்போதும் போல மோடி தலைமையிலான அரசு விளம்பர நோக்கத்திற்காக ஜெனரிக்மருந்து விஷயத்தை தற்போது சொல்லியுள்ளது.

உண்மையும் புரட்டும்
இரத்த புற்று நோய்க்கான மருந்து இமாட்னிப் ஜெனரிக் மருந்தாக இந்திய நிறுவனம் தயாரித்து குறைந்த விலையில் (ஒரு மாதத்துக்கான மருந்து விலை ரூ. 8000) சந்தைப்படுத்துகின்றது. 
ஆனால் அரசோ காப்புரிமை செய்யப்பட்ட மருந்தான கிளிவெக் எனும் வர்த்தகப் பெயர் கொண்ட மருந்தை அதிக விலைக்கு விற்க ( ஒரு மாதத்துக்கான விலை 11,000) அரசு சட்டம் கொண்டு வருகிறது. 

அதே போல, சிறுநீரக புற்று நோய்க்கான மருந்தை இந்திய நிறுவனம் ஜெனரிக்காக 10,000 ரூபாய்க்கு கொடுப்பதை தடுத்து பன்னாட்டு நிறுவனம் 2,80,000 ரூபாய்க்கு விற்க அரசு சட்டம் போட்டு அனுமதி வழங்குகிறது.

ஒரு பக்கம் மக்களிடத்தில் ஜெனரிக் மருந்துகளை வாங்குங்கள், மருத்துவர்களே ஜெனரிக் மருந்துகளை எழுதுங்கள் என சொல்லிவிட்டு, மறுபுறத்தில் காப்புரிமை எனும் ஆயுதத்தை கொண்டு மக்களை வதைக்க இவர்கள் போடும் வேஷத்தை அம்பலப்படுத்திட வேண்டும்.
ஜெனரிக் மருந்துகள் வேண்டாம் என்பதல்ல ஒட்டுமொத்த மருந்துத் துறையை சீரமைக்க முயற்சியே எடுக்காமல் இந்த முடிவு மட்டுமே பலனளிக்காது என்பதே. 

மக்களின் தேவை, தற்போது உள்ள நிலை என பலவும் பரிசீலிக்கப்படவேண்டும். 
உள்ளபடியே அரசு பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கீடு செய்யும் தொகை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. ஒட்டு மொத்த துறையும் தனியாரின் ஆதிக்கத்திற்குள் செல்கின்றது. அது பற்றி எங்கு கேள்வி எழுப்பினாலும் பதில் சொல்வதில்லை. 

சுகாதாரத்தை தனியார்மயமாக்கும் அரசின் விளையாட்டில் ஜெனரிக் மருந்து பயன்பாடும் ஒன்று என்பதில் மக்கள் தெளிவாக இருத்தல் அவசியம்.
                                                                                                                             நன்றி:தீக்கதிர்.
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

மோடி திட்டம் (மாட்டிறைசி தடை )வந்தால் இனி சாலை ஒர  பன்றிகள் இடத்தை மாடுகள் பிடித்துக்கொள்ளும்.

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...