bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 22 மார்ச், 2017

சந்தைப்படுத்தல்


உங்களது நிறுவனப் பொருட்களை சந்தைப்படுத்த திட்டம் ( மார்க்கெடிங் ப்ளானை) வகுக்க முக்கியமாக அடிப்படையான  கு பத்துறிப்புகளை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். 
அந்த   பத்து குறிப்புகளிலும் உங்களின் சந்தைப்படுத்தலில் இருக்கவேண்டியவை  மூன்று முக்கியம். 
அவைகளை கொண்டே நாம் சந்தைப்படுத்தல் பற்றிய  பத்து கட்டளைகளை வடிவமைக்கலாம். 
அந்த முதல் மூன்று விபரங்கள்:
1,நம் பொருட்களுக்கான சரியான தளத்தை தேர்ந்தெடுத்தல் 
2, வாடிக்கையாளரை அடையாளம் காணல் 
3, சரியான உள்ளடக்கத்தை உருவாக்கல் . 
அதன் பின்னர் இந்த மூன்றை முன்கொண்டு பத்து கட்டளைகளை வடிவமைக்கலாம்.

1. நீங்கள்  சந்தைப்படுத்தலில் இறங்கையில்  கடுமையான பாதையை தேர்ந்தெடுக்காதீர். அதை முடிந்தவரை தவிருங்கள். எளிதான தெளிவான, நிலையான பாதையை தேர்வு செய்து, உங்கள் சந்தைப்படுத்தல் (மார்க்கெடிங்)களத்தை வடிவமையுங்கள். 
உங்களின் இலக்கை நிர்ணயம் செய்யுங்கள், வாடிக்கையாளரை அடையாளம் காணுங்கள், பட்ஜெட்டை தயார் செய்யுங்கள், அதற்கான செயல் உத்தியை வடிவமைத்து வேலையை துவக்குங்கள்.
2. உங்களின் சந்தைப்படுத்தல் பிரச்சாரம் சரியான சமயத்தில், முயற்சியில் தகுந்த செலவில் செய்யப்படவேண்டியது அவசியம்.  அதற்கு முன் சந்தை பற்றிய ஆராய்ச்சி செய்து தெளிவாகி கொள்ளுங்கள். பலமுறை ஆராய்ந்த பின் செயலில் இறங்கவேண்டும். அத்துடன் மற்றவர்களின் வெற்றி, தோல்வியை ஆராயந்து அதிலிருந்து  உங்களின் முடிவை குழப்பமின்றி முடிவு செய்து கொள்ள வேண்டும் . உங்களின் மனம் கவர்ந்த பிரச்சாரங்களை ஆராயுங்கள், அது ஏன் உங்களை கவர்ந்தது, அதை எப்படி உருவாக்கினார்கள் என்று ஆராயுங்கள். அவைதான் மக்களின் மனதயும் கவரும்.இதுவே நீங்கள் உருவாக்கப்போகும் உங்கள் நிறுவனத்தின்  சந்தைப்படுத்தல்பிரச்சாரத்துக்கு உதவியாக இருக்கும். 
3.  நீங்கள் உங்கள் நிறுவனத்தின் மூலம் அடைய நினைக்கும் இலக்கு  எது  என்பதை முதலில் புரிந்து கொண்டு அதன் அடிப்படையில்  சந்தைப்படுத்தல் மற்றும் பிரச்சாரத்தை வடிவமைக்கவும். அதற்கு ஏற்ப தளத்தை தேர்ந்தெடுத்து  செயல்படுத்துங்கள். 
 4. உங்களின்  சந்தைப்படுத்தல்  உங்கள் நிறுவன பொருட்களை ,அடிப்படைகளை தெளிவாக மக்களுக்கு விளக்குவதாக இருத்தல் வேண்டும். அப்போதுதான் இணையவழியில் வாங்குபவர்களுக்கு சரியான புரிதல் உங்கள்  நிறுவனத்தை,பொருட்களைப்  பற்றிஉண்டாகும். அது  வருங்கால வாடிக்கையாளர்களையும் உருவாக்கும்.
5. எல்லா சந்தைப்படுத்தல்களும் சில நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் உருவாக்கப்படுகிறது. 
அந்த நம்பிக்கை எதுவாக வேண்டுமானாலும் இருக்கும். அரசு முடிவுகள்,பிற நிறுவனங்கள் மூலம் நம் முன்னர் எதிர்பாராமல்  வரும் ஆபத்து மற்றும் சவால்களையும் நம் கவனத்தில் கொள்ள வேண்டும்.அவற்றை சமாளிக்க எப்போதும் தயாராக இருக்கும்படி பார்த்துக்  கொள்வது மிக அவசியம். 
6.  எல்லாரும் சரியாக இருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. சில சமயம்  சந்தைப்படுத்தல் சரியான புரிதலின்றி தவறு ஏற்பட்டு அது தோல்வி அடையலாம். ஆனால் அந்த தோல்வியில் இருந்து உடனடியாக மீள்வது மிக அவசியம். நன்கு ஆராய்ந்து செய்த பிரச்சாரம் வெற்றியடையவில்லை என்றாலும் மனம் தளர தேவையில்லை. உங்கள் சந்தைப்படுத்தல் இதில் தோல்வியை தழுவியது என்று அலசி ஆய்ந்து அதை சரி செய்து , மாறுதலுக்கு உட்படுத்தும் அளவிற்கு வடிவமைத்து செயல்படுங்கள்.வெற்றி கிட்டும் . 

7. உங்களின் பிரச்சாரம், குறைந்த நாட்களுக்கு மட்டும் மக்களிடம் சென்றடைவது போல் அல்லாமல் நீண்ட கால விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் . இதற்காக கூடுதல் நேரத்தையும் பொருளையும் முதலீடு செய்ய தயங்காதீர். ஏனெனில் நீண்டகாலம் மக்கள் மனதில் இருக்கக்கூடிய 
சந்தைப்படுத்தல் பிரச்சாரங்கள்  நிறுவனத்துக்கு நல்ல வளர்ச்சியை தரும் . 
8.  உங்கள் சந்தைப்படுத்தல் சந்தையில் எப்படி எடுத்துக்கொள்ளப்படுகிறது, மக்களிடம் வரவேற்பு உள்ளதா,அதற்கு உங்களின் போட்டியாளர் தரும் பதிலடி என்ன என்பதை கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும்.அதற்கேற்ப அன்றாடம் நமது சந்தைப்படுத்தல் வடிவமைப்பு இருந்து கொண்டேயிருக்க வேண்டும்.அவவ்ப்போது  மக்களின் கருத்துக்களை  கேட்டு,உணர்ந்து உடனடியாக தீர்வுகளை காணவேண்டும் . அப்போதே வாடிக்கையாளரின் மத்தியில் நாம் உரிய முதலிடத்தை  பெறமுடியும். 
9.  வருங்காலத்தை பற்றி சிந்திப்பது முக்கியம். அதே சமயம் கடந்த காலத்தில் நிகழ்ந்தை ஆராய்வது தேவையாக உள்ளது. உங்கள் யுக்திகளின் முடிவுகளை ஆராய்ந்து அதில் தேவையான மாற்றங்களை செய்து மேம்படுத்துவது நல்லது. தேவையற்ற செலவுகளை குறைத்து, விளம்பரங்களை பட்ஜெட்டுக்குள் வைப்பது  நிறுவன வளர்ச்சிக்கு நல்லது. நல்ல முடிவுகளை தரப்போகும் பிரச்சாரங்களுக்கு மட்டும் செலவிடுங்கள். அதுதான்  உங்கள் நிறுவனத்துக்கு மக்களிடம் நல்ல பெயரையும் பிரபலத்தையும்,மரியாதையையும் பெற்றுத்தரும். 

10.  இலக்கை அடைய திட்டம் வகுத்துக்கொள்ளுங்கள். யார் யாருக்கு என்னென்ன பணிகள் என்று பிரித்து கொடுங்கள். அதை ஒருங்கிணைப்பது முக்கிய பணி.அதை தகுதியான ஒருவரிடம் ஒப்படையுங்கள். உங்கள் இலக்கை நிர்ணயித்தவுடன் உடனே செயலில் இறங்குங்கள்.தாமதமே வேண்டாம் 
நூறாண்டு வாழப்போகிறவன் போல் யோசி.ஆனால் நாளையே வாழ்வின் முடிவை காணப்போகிறவன் போல் அதை செயல்படுத்து .இது பொன்மொழி.அதை கடைபிடித்தால் வெற்றி உறுதி.
சாத்தியம் என்பது செயல்.வெறும் வார்த்தையல்ல.
                                                                                                                                                 -சுகுமாரன் 

ஞாயிறு, 19 மார்ச், 2017

விவசாயி வீட்டில் இழவு : யார் குற்றவாளி ?

இயற்கையா ? அரசா ?
காவிரிக்காக கர்நாடகவோடு மல்லுக்கட்டுகிறோம். ரொம்ப சரி, ஆனால், இங்கே என்ன செய்கிறோம்?” _ நாங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜீவானந்தனைச் சந்தித்து வறட்சியையும் விவசாயிகளின் சாவுகளையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, இப்படியொரு கேள்வியை அவர் என்னிடம் கேட்டார்.
செக்கானுர் கதவணை உடைந்து வீணாக வெளியேறும் காவிரி நீர்.
“காவிரி மற்றும் அதன் கிளை நதிகளின் வாய்க்கால்களும், டெல்டா மாவட்டத்திலுள்ள நூற்றுக்கணக்கான ஏரிகளும் தூர் வாரப்படாமல் புதர்ச் செடிகள் மண்டியும், சிதிலமடைந்தும் கிடப்பது; தூர் வாருவது என்ற பெயரில் நடந்துவரும் ஊழல்; மேட்டூருக்குக் கீழே நீரைச் சேமித்து வைக்க போதிய எண்ணிக்கையில் தடுப்பணைகளோ, கதவணைகளோ இல்லாமல் இருப்பது; தமிழகத்தின் காவிரிப் படுகையில் நடந்துவரும் மணல் கொள்ளை” – என நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதில் தமிழக அரசு காட்டிவரும் அக்கறையின்மை, அலட்சியம் என்ற கிரிமினல்தனத்தைச் சாடுவதாக இருந்தது, அவரது கேள்வி.
இந்தக் கேள்வி தமிழகம் முழுவதற்குமே பொருந்தக்கூடியது என்ற போதும், காவிரிப் படுகையைப் பொருத்தமட்டில் மிகுந்த முக்கியத்துவமுடையது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி மொத்த காவிரி நதி நீரில் தமிழகத்தின் பங்கு 419 ஆயிரம் மில்லியன் கனஅடி (டி.எம்.சி.) ஆகும். இதில், கர்நாடகா தமிழகத்திற்குத் தர வேண்டிய பங்கு 192 ஆ.மி.க.தான். மேட்டூருக்கு மேல் பகுதியில் கிடைக்கும் நீரின் அளவையும் சேர்த்தால், மேட்டூருக்கு ஆண்டொன்றுக்கு வந்து சேரும் நீரின் அளவு 217 ஆ.மி.க. மீதமுள்ள 202 ஆ.மி.க. நீரும் மேட்டூருக்குக் கீழே தமிழகத்தின் பகுதிகளில் கிடைக்கும் நீர் ஆகும். (ஆதாரம்: தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் பேரவை வெளியிட்டுள்ள மேட்டூர் அணை பாசனப் பகுதி – பயிர் சாகுபடியும் நீர் வழங்கல் திட்டமும் – 2013-14) நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்த கர்நாடகா மறுத்துவரும் இன்றைய நிலையில், தமிழகத்திலுள்ள காவிரிப் படுகையில் கிடைக்கும் நீரை முடிந்த அளவு சேமித்தும், சிக்கனமாகவும், திறம்படவும் பயன்படுத்திக் கொண்டால்தான், மேட்டூர் அணை பாசனப் பகுதியில் ஒரு போக சம்பா சாகுபடியையாவது உத்தரவாதப்படுத்த முடியும். ஆனால், தமிழக அரசின், ஆளுங்கட்சிகளின் செயல்பாடுகளோ இதற்கு நேர் எதிராகவே உள்ளது.
” சுமார் ஒரு கிலோமீட்டர் அகலம் கொண்ட கொள்ளிடம் ஆறு மழைக்காலத்தில் வெள்ள நீர் ஓடும் வடிகாலாகவே உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே அணை எதுவும் இல்லாததால்,2013-ஆம் ஆண்டில் மட்டும் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்ட சுமார் 20 டி.எம்.சி. தண்ணீர் நேராகக் கடலுக்குச் சென்றுவிட்டது. எனவே, தொழில்நுட்ப நிபுணர்களைக் கொண்ட குழுவை அமைத்து, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்ட நடவடிக்கை எடுக்குமாறு ” 2014-ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணையில், காவிரியின் துணை ஆறுகளில் 117 கோடி ரூபாய் செலவில் 61 சிறு அணைகளைக் கட்டத் திட்டமிட்டிருப்பதாகத் தமிழக அரசு தெரிவித்தது.
ஆற்றுப் படுகைகளில் நடைபெறும் மணல் கொள்ளையால் ஆற்று வழித்தடம் பள்ளம், மேடாகி நீரோட்டம் தடைப்பட்டு வீணாகும் நீர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இவற்றுள் எத்துணை அணைகள் கட்டி முடிக்கப்பட்டன, கட்டி முடிக்கப்பட்டவை எந்த அளவிற்குத் தரமாக உள்ளன என்பதெல்லாம் பெரும் புதிராகவே உள்ளன. குறிப்பாக, தமிழ்நாடு மூத்த வேளாண் பேரவையினர், “மேட்டூருக்குக் கீழே கல்லணை வரையிலும் இருபத்து மூன்று தடுப்பணைகள் கட்டத் திட்டமிடப்பட்டு, அதில் மூன்று தடுப்பணைகள் மட்டும்தான் இதுவரை கட்டப்பட்டுள்ளது என்றும், அப்படிக் கட்டப்பட்ட மூன்றில் செக்கானுர் தடுப்பணை கடந்த டிசம்பர் இறுதியில், அதாவது பல பத்தாண்டுகளில் காணப்படாத வறட்சி நிலவிய நேரத்தில் உடைந்துபோய், அரை டி.எம்.சி. தண்ணீர் வீணாகிப்போனதாக”க் குற்றஞ்சுமத்துகிறார்கள்.
கும்பகோணம் அருகே காவிரியின் கிளை நதியான அரசலாற்றில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்து போனதால், 2015-இல் பெய்த பெருமழையின் நீரையும் சேமிக்க முடியவில்லை. இந்த ஆண்டும் அந்தத் தடுப்பணை சீர்செய்யப்படவில்லை எனக் குற்றம் சுமத்துகிறார்கள், அப்பகுதி விவசாயிகள்.
மேட்டூர் அணையை மிக நீண்ட காலமாகத் தூர் வாராததால், அதன் முழுக் கொள்ளளவான 93.4 அடிக்கு நீரைச் சேமிக்க முடியாதென்றும், அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டும்போது அணையில் 74 அடி மட்டுமே நீர் தேங்கியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
காவிரியின் கிளை நதியான வெட்டாறு கடலில் கலக்கும் இடத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தள்ளி ஆற்றின் வடிகாலில் ஒரு கதவணையை அமைப்பதன் மூலம் கீவளூர் பகுதியைச் சுற்றியுள்ள 50 கிராமங்களில் 25,000 ஏக்கரில் கோடைப் பயிர் செய்ய முடியும் என்றொரு யோசனையை விவசாயத் துறை அமைச்சர் தொடங்கி அதிகாரிகள் வரை பலர் இடத்தில் சொல்லிய பிறகும், அந்தத் திட்டத்தின் சாத்தியப்பாடுகள் குறித்து ஆய்வு செய்யக்கூட மறுக்கிறது, தமிழக அரசு எனக் குற்றஞ்சுமத்துகிறார், நாங்குடியைச் சேர்ந்த விவசாயி ஜீவானந்தம்.
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் ஆங்காங்கே தடுப்பணைகளைக் கட்டி பருவ மழைக் காலத்தில் கிடைக்கும் தண்ணீரைச் சேமித்து வைப்பதன் மூலம், 10 டி.எம்.சி. தண்ணீரைப் பெற முடியும் எனக் கூறுகிறது, தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் பேரவையினர் வெளியிட்டுள்ள கையேடு.
இயற்கையின் வழியாகக் கிடைக்கும் நீரைச் சேமித்து வைக்க மறுப்பதில் மட்டுமல்ல, காவிரியின் நீர்வழித் தடங்களைப் பராமரிப்பதிலும் தமிழக அரசு பெரும் கிரிமினல் குற்றத்தையே இழைத்து வருகிறது. அதிலொன்று மணல் கொள்ளை. ஆற்று மணல் கொள்ளை ஒருபுறம் நிலத்தடி நீரை வற்றச் செய்துவிடுகிறது என்றால், இன்னொருபுறம் ஆற்றில் நீர் ஓடுவதைத் தடுத்துக் குட்டை போலாக்கி, எதற்கும் பலன் இல்லாமல் வீணடிக்கிறது.
காவிரி – கட்டளைக் கால்வாயின் அவலமான நிலை.
“காவிரி நீர் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சென்றடைய வினாடிக்கு 7,000 கன அடி தண்ணீரைத் திறந்துவிட்டால் போதும் என்ற நிலையில், மணல் கொள்ளையால் ஆற்றின் வழித்தடம் பள்ளமும் மேடுமாகித் தண்ணீர் செல்வது தடைப்பட்டுப் போவதால், 10,000 கன அடி நீரைத் திறந்துவிட வேண்டிய நிலையில் பொதுப்பணித் துறை உள்ளது. இந்த வேறுபாடு – வினாடிக்கு 3,000 கன அடி நீர் – எதற்கும் பயன்படாமல் வீணாகிறது” எனக் கூறுகிறார், தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் பேரவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிகாரி.
மணல் கொள்ளைக்கு அடுத்து காவிரியின் நீர்வழித் தடங்களைத் தூர் வாருவது என்ற பெயரில் நடந்து வரும் ஊழல். “ஐந்து இலட்ச ரூபாய்க்குள் இருக்கும் தூர் வாரும் வேலைகளை உள்ளூர் கட்சிக்காரர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அதற்கும் மேலே இருக்கும் வேலைகள் அமைச்சரின் மச்சான், மாமன் – என உறவு முறைகளை வைத்து அமைச்சரின் குடும்பமே எடுத்துக் கொள்கிறது. காண்டிராக்டு எடுப்பதில் இப்படியான தில்லுமுல்லு என்றால், தூர் வாரும் வேலையோ கண் துடைப்பாகவே நடைபெறுகிறது. பத்து இலட்ச ரூபாய் வேலையில், ஒண்ணரை இலட்ச ரூபாய் பொக்லைன் மிஷினுக்கு, ஒரு இலட்ச ரூபாய் ஆபீசுக்கு, மீதியெல்லாம் காண்டிராக்டு எடுத்திருக்கும் கும்பல் சுருட்டிவிடும். எங்கள் ஊரில் இப்படித்தான் நடந்தது. நாங்கள் பொக்லைன் டிரைவருக்கும், மேனேஜருக்கும் சோறு கொடுத்து, படிக்காசும் கொடுத்து மேலும் இரண்டு கிலோ மீட்டர் வெட்டினோம்” என்கிறார், நாங்குடியைச் சேர்ந்த விவசாயி ஜீவானந்தம்.
இது மட்டுமல்ல, எப்போது தூர் வார வாருவார்கள் எனக் கிராம மக்களுக்கே தெரியாது. தண்ணீர் வருவதற்கு நான்கு நாட்கள் முன்னதாக, ராத்திரியோடு ராத்திரியாக வந்து வெட்டிவிட்டுப் போவார்கள். தாலுகா ஆபிஸில் இரண்டு பொக்லைன் மிஷின் இருந்தால், விவசாயிகளே டீசல் போட்டு உருப்படியாக வெட்டிவிடுவோம் என்கிறார், அவர்.
“நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஒப்படைக்கப்படும் தூர்வாரும் பணிகள் “பேட்ச் ஓர்க்” பார்ப்பது போல நடைபெறும். வாய்க்கால்களை முறையாகத் தூர் வாருவது பற்றி அரசியல்வாதிகள் மட்டுமல்ல, இப்பொழுதெல்லாம் குடியானவர்களும் அக்கறை கொள்வதில்லை” என்கிறார், வேளாண் துறையைச் சேர்ந்த இளநிலை அதிகாரி.
நீர் வழித்தடங்களைப் புதர்ச் செடிகள் அண்டாமல், மணல் திட்டுகள் உருவாகாமல் முறையாகப் பராமரிப்பது, நீர் தடையின்றி ஓடுவதற்கு அவசியமானது என்ற பொதுப் புரிதல் அனைவருக்கும் இருக்கும் என்ற போதும், காவிரி டெல்டாவைப் பொருத்தவரை இந்தப் பராமரிப்புப் பணி இன்னும் கூடுதலாகக் கவனம் கொடுத்துச் செய்ய வேண்டிய ஒன்றாகும்.
வெட்டாறு கடலில் கலக்கும் இடமருகே ஒரு கதவணையை அமைக்கக் கோரி வரும் நாங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜீவானந்தம்.
கல்லணைக்குக் கீழேயுள்ள டெல்டா பகுதியில் காவிரி 38 கிளை நதிகளாகப் பிரிந்து 724 கி.மீ. தூரத்திற்கு ஓடி, கடலில் கலக்கிறது. காவிரி மற்றும் அதன் கிளை நதிகளில் இருந்து பிரிந்து செல்லும் வாய்க்கால்களின் எண்ணிக்கை 25,228. இந்த வாய்க்கால்கள், ஏ வகுப்பு, பி வகுப்பு எனத் தொடங்கி ஜி வகுப்பு என ஏழு விதமாகப் பிரிக்கப்பட்டு, 28,360 கி.மீ. தூரத்திற்கு நீரை எடுத்துச் செல்லுகின்றன. (ஆதாரம்: தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் பேரவை வெளியிட்டுள்ள மேட்டூர் அணை பாசனப் பகுதி கையேடு, 2016-2017, பக்.12)
டெல்டா பகுதி முழுவதுமே கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் அமையாத பூகோள காரணத்தால், அதாவது, 2,000 அடிக்கு ஒரு அடிவீதம் உயர்ந்து கிட்டதட்ட சமநிலையில் உள்ளதால்,  காவிரி, அதன் துணை நதிகள், வாய்க்கால்களில் ஓடும் நீர் மெதுவாகவே கடலை நோக்கிப் பாய்கிறது. இந்தப் புவியியல் காரணம், ஆற்று வழித் தடங்களையும் வாய்க்கால்களையும் முறையாகப் பராமரிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தினாலும், தமிழக அரசு கடந்த பல ஆண்டுகளாகவே அலட்சியமாகவே நடந்து வருகிறது. அதுவும் கடந்த ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் நிலைமை படுமோசம் என்கிறார்கள் டெல்டா பகுதி விவசாயிகள்.
இந்த அலட்சியம் இரண்டு விதங்களில் விவசாயத்தை, விவசாயிகளை நேரடியாகப் பாதிக்கிறது. ஒருபுறம், தண்ணீர்ப் பற்றாக்குறை காலங்களில் நீர் சீராகப் பாய்வதற்கு ஏற்படும் தடைகளால் தண்ணீர் வீணாகிறது. பெருமழைக் காலங்களிலோ வாய்க்கால்கள் நிரம்பி, உடைப்பு ஏற்பட்டு, வயல்களுக்குள் புகுந்து விவசாயிகளுக்கு நட்டமேற்படுத்துகிறது. 2015-இல் வெள்ளத்தினால் டெல்டா மற்றும் கடலூர் பகுதி விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பு 1,600 கோடி ரூபாய்.
“டெல்டா பகுதியிலுள்ள வாய்க்கால்கள் அனைத்தும் முறையாகப் பராமரிக்கப்படாததால், அதன் மொத்த கொள்ளளவில் 60 முதல் 65  சதவீத நீரை மட்டுமே எடுத்துச் செல்லும் அளவிற்குத் திறன் குறைந்து போயுள்ளன. இந்தத் திறனை 80 முதல் 85 சதவீதமாக அதிகப்படுத்தினால், பெருமளவு நீரைச் சேமிக்க முடியும். இதற்கு வாய்க்கால்களை முழுமையாகச் செப்பனிட்டுப் பராமரிப்பதற்கு, ஆண்டுக்கு 200 கோடி வீதம் ஐந்தாண்டுகளில் 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினால் போதும்” என்கிறார், ஓய்வுபெற்ற வேளாண் அதிகாரி.
டெல்டா மாவட்ட வாய்க்கால்கள் மட்டுமல்ல, சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரையிலுள்ள ஏரிகளும், குளங்களும், ஆற்று வழித் தடங்களும் மணல் கொள்ளையாலும், ஆக்கிரமிப்புகளாலும் சீரழிந்து கிடப்பதை, 2015-இல் பெய்த பெருமழை அம்பலப்படுத்திக் காட்டியது. நீரைச் சேமித்து வைத்துப் பயன்படுத்திக் கொள்ள நமது முன்னோர்கள் உருவாக்கி வைத்துவிட்டுப் போன பழைய கட்டுமானங்களைச் சீரழித்ததோடு மட்டுமின்றி, புதிதாக உருவாக்குவதிலும் தமிழக அரசு அக்கறையற்றுதான் நடந்து வருகிறது என்பதற்குப் பல்வேறு ஆதாரங்கள் உள்ளன.
எடுத்துக்காட்டாக, காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம். கரூர் அருகேயுள்ள மாயனூரில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணையிலிருந்து ஒரு ஈர்ப்பு கால்வாயை அமைத்து, வெள்ளக் காலங்களில் காவிரியில் பாயும் நீரை இக்கால்வாயின் வழியாகக் கொண்டு சென்று, அதனைக் குண்டாற்றில் இணைத்து, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த 3.37 இலட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் பாசனம் பெறும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம். இத்திட்டத்திற்கு 3,516 கோடி ரூபாய் செலவாகும் எனப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டாலும், இந்தத் திட்டம் இன்னும் காகித அறிக்கையாகவே இருந்து வருகிறது.
கடந்த 2015-ஆம் ஆண்டு பெய்த பெருமழையால் கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கிப் போன பயிர்கள்.
இது போல கடந்த தி.மு.க. ஆட்சியில் தயாரிக்கப்பட்ட திட்டமான தாமிரபருணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டமும் நடைமுறைக்கு வரவில்லை.
காவிரியின் முக்கிய துணை ஆறான பவானி நதியில் குறுக்கே கதவணைகளே இல்லை என்பதோடு, சிறுமுகை, சத்தியமங்கலம், பவானிசகார் உள்ளிட்ட 11 இடங்களில் கதவணைகள் கட்ட மைய அரசின் மரபுசாரா எரிசக்தித் துறை முன்வைத்த பரிந்துரைகளும் கண்டுகொள்ளப்படவில்லை என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.
2012-இல் அமைக்கப்பட்ட காவிரி தொழில்நுட்பக் குழு, தடுப்பணைகளும் கதவணைகளும் கட்ட முன்வைத்த பரிந்துரைகள் மீது இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்கிறது மற்றொரு செய்தி.
ஒரு தொழிற்சாலை தொடங்குவதற்கு நிலம், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட கட்டுமான வசதிகள் எந்தளவிற்கு முக்கியமானதோ, அதுபோல விவசாயத்திற்குப் பாசன வசதி அடிப்படையானது. தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அடிப்படை கட்டுமான வசதிகளை இலவசமாகவோ, மானியமாகவோ செய்து கொடுத்து, அவர்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்துவரும் ஆட்சியாளர்கள், விவசாயிகளைத் தம் சொந்தக் கையை ஊன்றி கரணம் போடும்படிக் கைகழுவி விடுகிறார்கள்.
வெறும் 650 கோடி ரூபாய் முதலீட்டைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்த நோக்கியா நிறுவனத்திற்கு, அது தொடங்கப்பட்ட முதல் மூன்று ஆண்டுகளில் தமிழக அரசும், மைய அரசும் வாரிக்கொடுத்த பல்வேறு சலுகைகளின் மதிப்பு மட்டும் 10,000 கோடி ரூபாயாகும். கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்ட வரி விலக்கோ பல பத்து இலட்சம் கோடி ரூபாய்களைத் தாண்டுகிறது. இப்படி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பொதுப் பணத்தை வாரிக்கொடுக்கத் தயங்காத ஆட்சியாளர்கள், 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்து, டெல்டா வாய்க்கால்களைச் சீரமைக்க மறுக்கிறார்கள். காவிரி-குண்டாறு இணைப்பு, தாமிரபரணி-நம்பியாறு இணைப்பு உள்ளிட்டு பல்வேறு திட்டங்களை மட்டுமல்ல, உரிய இடங்களில் கதவணைகள், தடுப்பணைகளை முறையாகக் கட்டிப் பராமரிப்பதில்கூட அக்கறையற்று இருக்கிறார்கள்.
இந்தியாவெங்கிலுமே விவசாயம் புறக்கணிக்கப்படுவதும், விவசாயிகள் மாற்றந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்படுவதும் அரசுகளின், ஆட்சியாளர்களின் நிகழ்ச்சி நிரலாக இருக்கின்றபோதும், விவசாயத்தைப் புறக்கணிப்பதில் தமிழக அரசோ இன்னும் மூர்க்கமாக நடந்துவருகிறது. ஆற்று மணல், தாது மணல், கிரானைட், நிலம் (ரியல் எஸ்டேட்) ஆகிய இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் கும்பல்தான் ஆளுங்கட்சி உள்ளிட்டு அனைத்து ஓட்டுக் கட்சிகளிலும் நிரம்பியிருப்பதால், தலைமைச் செயலர் தொடங்கி தலையாரி வரையிலான அதிகார வர்க்கம், போலீசு அனைத்தும் இந்தக் கும்பலின் கையாளாக இருப்பதால், தமிழக விவசாயத்தின் அழிவை இந்தக் கும்பல் நாலுகால் பாய்ச்சலில் துரிதப்படுத்துகிறது. விவசாயத்திற்கு ஆதாரமான நீர் ஆதாரங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுவதை, புறக்கணிக்கப்படுவதை இந்தப் பின்னணியிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த நிலையில், தமிழகத்திலுள்ள ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீராதாரங்களைத் தூர்வாரிப் பராமரிப்பதற்கு 3,400 கோடி ரூபாய் ஒதுக்கப் போவதாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு, ஆடு நனைகிறது என ஓநாய் அழுத கதையைத்தான் நினைவுபடுத்துகிறது.
  • செல்வம்
    புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2017

சனி, 18 மார்ச், 2017

கவித்துவ நடையில் கம்யூனிஸ்ட் அறிக்கை

"உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்!" என்று அறைகூவல் விடுத்த கம்யூனிஸ்ட் அறிக்கை வெளிவந்து 168 ஆண்டுகள் ஆகின்றன. 1848 மார்ச் 18 அன்றுதான் கம்யூனிஸ்ட் அறிக்கை முதன்முதலாக வெளியிடப்பட்டது. 
மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் ஆகிய இருவரின் கூட்டுச் சிந்தனை வெளிப்பாடே கம்யூனிஸ்ட் அறிக்கையென்றாலும் இந்தப் படைப்பின் மூத்த பங்காளி மார்க்ஸ்தான் என்று கூறுவார் இளைய பங்காளி ஏங்கெல்ஸ். 

அப்போது மார்க்ஸுக்கு வயது 30: 

ஏங்கெல்ஸுக்கு வயது 28. 

விசாலமான உலகக் கண்ணோட்டமும், நுட்பமான தெளிந்த அறிவுத் தேடலும், ஆழ்ந்த தத்துவ ஞானமும் பெற்ற உத்வேகமான இளைஞர்களாக அவர்கள் இருந்தனர்.

ஆட்சியதிகாரம் என்பது என்ன?

1. முதலாளிகளும் பாட்டாளிகளும்,
2. பாட்டாளிகளும் கம்யூனிஸ்ட்டுகளும்
3. சோசலிச, கம்யூனிச இலக்கியம்
4. தற்போதுள்ள பற்பல எதிர்க்கட்சிகள் குறித்து கம்யூனிஸ்ட்டுகளின் நிலை - 

இவ்வாறு நான்கு தலைப்புகளிலான நான்கு அத்தியாயங்களில் அறிக்கை அன்றைய நிலைமைகளையும் குறிக்கோள்களையும் விவரித்துக் கூறுகிறது.

மற்றும் பிற்போக்கு சோசலிசம், பிரபுத்துவ சோசலிசம், குட்டி முதலாளித்துவ சோசலிசம், ஜெர்மானிய, அல்லது "மெய்யான" சோசலிசம், பழைமைவாத அல்லது முதலாளித்துவ சோசலிசம், விமர்சன- கற்பனாவாத சோசலிசமும் கம்யூனிசமும் என, நான்காவது அத்தியாயத்தில் பல பிரிவுகளிலான துணைத் தலைப்புகளிலும் கம்யூனிஸ்ட் அறிக்கை பல விஷயங்களைப் பேசுகிறது.

"நவீனகால அரசின் ஆட்சியதிகாரம் என்பது முதலாளி வர்க்கம் அனைத்துக்குமான பொது விவகாரங்களை நிர்வகிக்கும் குழுவேயன்றி வேறில்லை" எனக் கூறும் அறிக்கை, பாட்டாளி வர்க்கப் புரட்சியின் முதல்கடமையாக,"பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கத்தின் நிலைக்கு உயர்த்துவதுதான் - ஜனநாயகத்திற்கான போரில் வெற்றி ஈட்டுவதுதான்" என்கிறது.

கம்யூனிஸ்ட் அறிக்கையை மார்க்சும், ஏங்கெல்சும் பதிப்பித்ததை விளக்கும் ஓவியம்.
"தொழிலாளர்களின் சர்வதேச அமைப்பாகிய கம்யூனிஸ்ட் கழகம் அந்தக் காலத்திய நிலைமைகளில் இரகசியமாகவே செயல்பட வேண்டியிருந்தது. 

1847 நவம்பரில் லண்டனில் நடைபெற்ற மாநாட்டில் இந்தக் கழகத்தின் விவரமான தத்துவார்த்த, நடைமுறை வேலைத் திட்டத்தை வெளியீட்டுக்காக வகுத்துத் தருமாறு அடியில் கையொப்பமிட்டுள்ளோரைப் பணித்தது. 

அவ்வாறு உருவானதே பின்வரும் அறிக்கை. அச்சிடப்படுவதற்காக இதன் கையெழுத்துப் பிரதி பிப்ரவரி (பிரெஞ்சு) புரட்சிக்கு ஒருசில வாரங்களுக்கு முன்னால் லண்டன் போய்ச் சேர்ந்தது." - 1872-ஆம் ஆண்டு, கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஜெர்மன் பதிப்புக்குக் கையெழுத்திட்டு வழங்கிய தங்களின் முன்னுரையில் மார்க்ஸும் ஏங்கெல்ஸும் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அந்தப் புரட்சிகர அறிக்கை அந்தக் காலத்திலேயே எத்தனை நாடுகளில், எத்தனை மொழிகளில் பெயர்க்கப்பட்டு எத்தனைப் பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன என்பதற்கான விவரத்தை அறிக்கையின் படைப்பாளிகளான அவர்கள் அதே முன்னுரையிலேயே தெரிவித்துள்ளனர் :"முதன்முதலில் அறிக்கை ஜெர்மன் மொழியில் வெளிவந்தது. 

பிறகு ஜெர்மனியிலும் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலுமாய் வெவ்வேறான பன்னிரண்டு பதிப்புகளுக்குக் குறையாமல் இம்மொழியில் அறிக்கை வெளிவந்திருக்கிறது.முதன்முறையாய் ஆங்கிலத்தில் இது 1850-இல் லண்டன் ரெட் ரிபப்ளிக்கன் பத்திரிகையில் வெளியாயிற்று. இந்த மொழிபெயர்ப்பைச் செய்தவர் மிஸ் ஹெலன் மாக்ஃபர்லென்.1871-இல் அமெரிக்காவில் மூன்றுக்குக் குறையாத வெவ்வேறு ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளிவந்தன.

பிரெஞ்சு மொழிபெயர்ப்பு 1848-ஆம் ஆண்டு ஜூலை எழுச்சிக்குச் சிறிது காலத்துக்கு முன் முதன்முதலில் பாரீசில் வெளியாயிற்று. நியூயார்க்கில் சோசலிஸ்ட் பத்திரிகையிலும் வெளிவந்திருக்கிறது... புதிய மொழிபெயர்ப்பு ஒன்று தயாராகி வருகிறது. 

முதன்முதலாக ஜெர்மன் மொழியில் வெளிவந்த பின்னர் சிறிது காலத்திற்குள் போலிஷ் பதிப்பு ஒன்று லண்டனில் வெளியிடப்பட்டுள்ளது. 

1860-ஆம் ஆண்டுகளில் ரஷ்யப் பதிப்பு ஒன்று ஜெனீவாவில் வெளிவந்தது. சிறிது காலத்திற்குள் டேனிஷிலும் மொழிபெயர்க்கப்பட்டது."1888-ஆம் ஆண்டு வெளிவந்த அறிக்கையின் ஆங்கிலப் பதிப்புக்கு அளித்த முன்னுரையில் ஏங்கெல்ஸ் கூறும்போது, " தற்போது சோசலிச இலக்கியங்கள் யாவற்றிலும் இது மிகவும் பல்கிப் பரவி அதிக அளவுக்கு உலகம் தழுவிய வெளியீடாக இருக்கிறது என்பதிலும், சைபீரியாவிலிருந்து கலிபோர்னியா வரையில் கோடானுகோடி தொழிலாளி மக்களால் பொது வேலைத்திட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதிலும் ஐயப்பாட்டுக்கு இடமில்லை" என்கின்றார் மிகுந்த பெருமிதத்துடன்.

1917 ரஷ்ய சோசலிசப் புரட்சிக்கு முந்தைய காலத்திலேயே கம்யூனிஸ்ட் அறிக்கை 35 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 544 பதிப்புகள் வெளிவந்துள்ளது. இவை அனைத்தும் ஐரோப்பிய மொழிகளில் வெளிவந்தவை.
கனவுகளிடத்தில் விஞ்ஞானம்

உலகிற்கே ஓர் புதுமையாக சோசலிசப் புரட்சியை அரங்கேற்றிய மாமேதை லெனின் கம்யூனிஸ்ட் அறிக்கையைப் பற்றிக் கூறுகையில், "ஒரு மேதைமைக்குரிய தெளிவுடனும், மதிநுட்பத்துடனும் உலகத்தைப் பற்றிய கண்ணோட்டத்தை அறிக்கை வழங்குகிறது. 

சமூக வாழ்க்கைக் களத்தை உள்ளடக்கிய ஒரு முரண்பாடற்ற பொருள்முதல்வாதத் தத்துவமாகவும், வளர்ச்சி பற்றிய மிக விரிவான, மிகச் சிறந்த கோட்பாடாகிய இயக்கவியல் தத்துவமாகவும், வர்க்கப் போராட்டத் தத்துவமாகவும், ஒரு புதிய பொதுவுடைமைச் சமூகத்தின் படைப்பாளியாகிய உழைப்பாளி வர்க்கத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்கப் புரட்சிகரப் பங்களிப்பை விளக்கும் தத்துவமாகவும் கம்யூனிஸ்ட் அறிக்கை அமைந்துள்ளது.

"மேலும் லெனின் கூறுகிறார் : "தொழிலாளி வர்க்கத்திற்கு மார்க்ஸும் ஏங்கெல்ஸும் ஆற்றிய பணியைப் பற்றி ஒரு சில சொற்களிலே பின்வருமாறு சொல்லிவிடலாம் : தொழிலாளி வர்க்கம் தன்னைத் தானே அறிந்து கொள்ளுமாறும், தன்னைப் பற்றிய உணர்வு கொள்ளுமாறும் அவர்கள் போதித்தார்கள்; மேலும், கனவுகள் இருந்த இடத்தில் விஞ்ஞானத்தை நிலைநாட்டினார்கள். 

" உழைப்போரை ஒடுக்கி, அவர்களது உழைப்பைச் சுரண்டிக் கொழுக்கும் முதலாளித்துவத்தை ஒழித்திடத் தோன்றிய கம்யூனிசம் என்பது முதலாளிகளின் - அவர்களது ஆட்சி அதிகார வர்க்கங்களின் பார்வையில் ஒரு பூதம்தான்! 

கம்யூனிசத்தின் மகா சக்தியைக் கண்டு அஞ்சிய அவர்களின் மிரட்சியிலிருந்தே மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் தங்களின் அறிக்கையை - அந்தப் பிரகடனத்தை உத்வேகத்தோடு இப்படி ஆரம்பிக்கிறார்கள்: " ஐரோப்பாவை ஆட்டுகிறது ஒரு பூதம் - கம்யூனிசம் என்னும் பூதம். போப்பாண்டவரும், ஜார் அரசனும், மெட்டர்னிஹும், கிஸோவும், பிரெஞ்சு தீவிரவாதிகளும், ஜெர்மன் உளவாளிகளுமாக - பழைய ஐரோப்பிய சக்திகள் அனைத்தும் இந்தப் பூதத்தை ஓட்டுவதற்காகப் புனிதக் கூட்டுச் சேர்ந்திருக்கிறார்கள்.

 "இந்தப் ‘பூதத்தை’ச் சொல்லி முதலாளிகளும் அவர்களின் அதிகார வர்க்கமும் கம்யூனிசம் குறித்து உலகத்திற்குப் பூச்சாண்டி காட்டினர்.அந்த ஐரோப்பிய சக்திகளைக் குறித்து இவ்வாறான எள்ளல் சித்தரிப்புடன் அறிமுகம் செய்கிறது அறிக்கை. ஐரோப்பிய நாடுகளின் தொழிலாளர்களுக்குக் கம்யூனிசத்தின் மீது வெறுப்பு உண்டாவதற்காகப் புனையப்பட்ட பூச்சாண்டிக் கதை இது என்பதை உணர்த்துகிறது அறிக்கை. 

அந்தப் பூச்சாண்டிக் கதையை முறியடிப்பதற்கு அன்றே அந்த ஞானிகள் தயாராகியிருக்கிறார்கள் :" பகிரங்கமாய் அனைத்து உலகும் அறியும் வண்ணம் கம்யூனிஸ்ட்டுகள் தங்கள் கருத்துக்களையும் தங்கள் நோக்கங்களையும் தங்கள் போக்குகளையும் வெளியிட்டு ,நேரடியாய்க் கட்சியின் அறிக்கை மூலம் கம்யூனிசப் பூதமெனும் இந்தக் குழந்தைப் பிள்ளைக் கதையை எதிர்க்க வேண்டிய தருணம் வந்து விட்டது."

"இந்த நோக்கத்துடன் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்டுகள் லண்டனில் கூடி, அடியிற் கண்ட அறிக்கையை ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஃபிளெமிஷ், டேனிஷ் மொழிகளில் வெளியிடுவதற்காக வகுத்திட்டனர்."-என்கிறது அறிக்கை.
திரையிட்டு மறைக்கப்பட்ட சுரண்டலுக்கு பதிலாய்...

‘மார்க்ஸ்-ஏங்கெல்ஸின் கம்யூனிஸ்ட் அறிக்கை கவித்துவ நடையில் எழுதப்பட்டுள்ளது’ என்று பெருமிதப் பாராட்டுதலோடு கூறினார் கவியரசு கண்ணதாசன். 

இதோ, அதற்கு கம்யூனிஸ்ட் அறிக்கையிலிருந்து சில எடுத்துக்காட்டுகள் :"எங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் ஆதிக்க நிலை பெற்றதோ அங்கெல்லாம் அது எல்லா பிரபுத்துவ உறவுகளுக்கும், தந்தைவழிச் சமுதாய உறவுகளுக்கும், கிராமந்தரப் பாரம்பரிய உறவுகளுக்கும் முடிவுகட்டியது. மனிதனை இயற்கையாகவே மேலானோருக்குக் கீழ்ப்படுத்திக் கட்டிப்போட்ட பல்வேறு வகையான பிரபுத்துவ பந்தங்களையும் ஈவுஇரக்கமின்றி அறுத்தெறிந்துவிட்டு, மனிதனுக்கும் அப்பட்டமான தன்னலத்தைத் தவிர, பரிவு உணர்ச்சியில்லாப் பணப் பட்டுவாடாவைத் தவிர வேறு ஒட்டுமில்லை உறவுமில்லை என்றாக்கிவிட்டது. 

சமயத்துறைப் பக்திப் பரவசம் , பேராண்மையின் வீராவேசம், சிறுமதியோரது உணர்ச்சிப் பசப்பு ஆகிய புதிய பேரானந்தங்களை எல்லாம் தன்னலக் கணிப்பெனும் உறைபனிக் குளிர்நீரில் மூழ்கடித்துள்ளது. மனிதனது மாண்பினைப் பரிவர்த்தனை மதிப்பாய் மாற்றியிருக்கிறது. 

சாசனங்களில் பிரகடனம் செய்யப்பட்ட, விலக்கவோ துறக்கவோ முடியாத எண்ணிலடங்காச் சுதந்திரங்களுக்குப் பதிலாய், வெட்கங்கெட்ட வாணிபச் சுதந்திரமெனும் ஒரேயொரு சுதந்திரத்தை ஆசனத்தில் அமர்த்தி வைத்திருக்கிறது. சுருங்கச் சொல்வதெனில், சமயத்துறை பிரமைகளாலும் அரசியல் பிரமைகளாலும் திரையிட்டு மறைக்கப்பட்ட சுரண்டலுக்குப் பதிலாய், முதலாளித்துவ வர்க்கம் வெட்க உணர்ச்சியற்ற, நிர்வாணமான, நேரடியான, மிருகத்தனமான சுரண்டலை நிலைநாட்டியிருக்கிறது.

" முதலாளித்துவ வர்க்கம் தோன்றிய ஒரு நூற்றாண்டுக்குள் அது தோற்றுவித்த பிரம்மாண்டங்களைப் பற்றி அறிக்கை வர்ணிக்கிறது. அத்துடன் "முதலாளித்துவ வர்க்கம் தன்னை அழித்தொழிக்கப்போகும் ஆயுதங்களை வார்த்தெடுத்திருப்பது மட்டுமல்லாமல் அதை பிரயோகிப்பதற்குரிய ஆட்களையும் - பாட்டாளிகளாகிய நவீன தொழிலாளி வர்க்கத்தையும் தோன்றியெழச் செய்திருக்கிறது" என்றும் சுட்டிக்காட்டுகிறது.

"பிரபுத்துவ சமுதாயத்தின் இடிபாடுகளிலிருந்து முளைத்தெழுந்துள்ள தற்கால முதலாளித்துவ சமுதாயம் வர்க்கப் பகைமைகளுக்கு முடிவுகட்டிவிடவில்லை. 

பழையனவற்றின் இடத்தில் புதிய வர்க்கங்களையும் புதிய ஒடுக்குமுறை நிலைமைகளையும், புதிய போராட்ட வடிவங்களையும் நிலைநாட்டியிருக்கிறதே அன்றி வேறில்லை" என்றும் கூறுகிறது.வெகுகாலமாக - இன்றுவரை - மக்களை ஏமாற்றுவதற்காக சோசலிசம், சமத்துவம் என்கிற சொற்களை உச்சரிக்காத முதலாளித்துவக் கட்சிகள் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம். அப்படி உச்சரிக்கிற அந்தக் கட்சிகளிடம் முதலாளித்துவ எதிர்ப்பு மட்டும் இருக்காது! இதை 168 ஆண்டுகளுக்கு முன்னரே - 1848-லேயே கம்யூனிஸ்ட் அறிக்கை நையாண்டி தொனிக்க இடித்துரைத்துவிட்டது.

"முதலாளித்துவ சோசலிசத்தைச் சுருக்கமாய் ஒரே வாக்கியத்தில் சொல்லிவிடலாம்: முதலாளி முதலாளியாய் இருப்பது தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காகவே."
ஆயிரம் ஆண்டுகளின் தலைசிறந்த சிந்தனையாளர்

ரஷ்யப் புரட்சிக்குப் பிந்தைய காலத்தில் உலகின் மற்ற மொழிகளிலும் வெளிவந்துள்ளது. தமிழ் முதலான இந்திய மொழிகளில் கம்யூனிஸ்ட் அறிக்கை பல பதிப்புகள் வெளிவந்துள்ளது
உலகில் மற்ற நூல்களைவிடக் கூடுதல் எண்ணிக்கையில் பதிப்பிக்கப்பட்டதும், உலகெங்கும் மிக விரிந்த அளவில் அறியப்பட்டதும், வேறு எந்த அரசியல் நூலையும்விடக் கூடுதலான தாக்கத்தை ஏற்படுத்தியதும் கம்யூனிஸ்ட் அறிக்கை மட்டும்தான்.

"உலகில் கடந்த ஆயிரம் ஆண்டுகளின் தலைசிறந்த சிந்தனையாளர் யார்?" என்ற கேள்வியை 1999-இல் லண்டன் பி.பி.சி.செய்தி நிறுவனம் எழுப்பி, தனது நேயர்களிடம் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியது. அதில் பங்கேற்றவர்களில் மிகமிகப் பெரும்பான்மையோர் அளித்த பதில், "கடந்த ஆயிரம் ஆண்டுகளின் தலைசிறந்த சிந்தனையாளர் காரல்மார்க்ஸ்" என்பதாகும்! 

"கம்யூனிஸ்ட்டுகள் தங்களின் கருத்துக்களையும் குறிக்கோள்களையும் மூடிமறைக்க மனம் விரும்பாதவர்கள். 
இன்றுள்ள சமுதாயத்தின் நிலைமைகள் யாவற்றையும் பலவந்தமாய் வீழ்த்த வேண்டும். அப்போதுதான் தங்களின் இலட்சியங்கள் நிறைவேறும் என்று கம்யூனிஸ்ட்டுகள் ஒளிவுமறைவின்றி பறைசாற்றுகிறார்கள். 
அஞ்சி நடுங்கட்டும் ஆளும் வர்க்கங்கள், கம்யூனிசப் புரட்சி வருகிறதென்று. பாட்டாளிகள் அடிமைச் சங்கிலியைத் தவிர இழப்பதற்கு ஏதும் இல்லாதவர்கள். 
அவர்கள் வென்று பெறுவதற்கு அனைத்து உலகும் இருக்கிறது. 
உலகத் தொழிலாளர்களே,ஒன்றுசேருங்கள்!"- என்கிற கம்பீரமான நம்பிக்கை அறைகூவலுடன் தங்கள் கம்யூனிஸ்ட் அறிக்கையை நிறைவு செய்துள்ளனர் மார்க்ஸும் ஏங்கெல்ஸும்.இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கையின் 150 ஆண்டு நிறைவு விழா 1998 பிப்ரவரி முதல் உலகெங்கும் ஆய்வரங்கச் சிறப்பு உரைகளோடும், அறிக்கை குறித்த ஆய்வு நூல் வெளியிடுதலோடும் கொண்டாடப்பட்டது.

"கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பற்றிய விளக்கக் கட்டுரைகள்" எனும் நூலின் பதிப்பாசிரியர் பிரகாஷ் காரத் தமது அறிமுக உரையில் கூறுகிறார்-"புரட்சிகர இயக்கத்தின் அடிப்படையான இலக்குத் திட்டமும் அறிவியல் ரீதியான தத்துவத்தின் வலிமையும் இணைந்து உருவாக்கப்பட்ட ஆவணமாகக் கம்யூனிஸ்ட் பிரகடனம் அமைந்துள்ளதால்தான் ஓர் உயிரோட்டமுள்ள ஆவணமாக அது தொடர்ந்து நீடிக்கிறது. 

எளிய நடையில் - ஆனால் ஆழமான பொருளுடன் எழுதப்பட்டிருப்பதால், புரிவதற்குக் கடினமான தத்துவம்கூட சாதாரண தொழிலாளியும் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவாக, கச்சிதமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கம்யூனிச இயக்கம் உருவாக்கியுள்ள நூல்களிலேயே மிகவும் சக்திவாய்ந்த நூலாக கம்யூனிஸ்ட் பிரகடனம் இன்றளவும் நீடிக்கிறது."

இந்தியாவில்...

1920களின் ஆரம்ப ஆண்டுகளிலிருந்தே இந்தியாவில் பல மையங்களிலும் கம்யூனிஸ்ட் குழுக்கள் செயல்பட்டுவந்தன. 
அன்று பிரிட்டிஷ் ஆட்சியில் கம்யூனிஸ்ட் பிரச்சாரத்திற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்ததால் கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஆங்கிலப் பிரதிகள் பிற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு ரகசியமாகக் கடத்திக் கொண்டுவரப்பட்டு - முக்கியமாக இந்தியப் புரட்சியாளர்களிடம் சேர்க்கப்பட்டன.1922-இல் லிபர்ட்டி பப்ளிகேஷன்ஸ் ஆங்கில மொழியில் ஆறு அணா விலையில் கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டது. இதுதான் இந்தியாவில் முதன்முறையாக வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையாகும். வெளியீட்டாளர் பெயர் ராஞ்சோத் தாஸ் புவன் வோட்வாலா. இவர் தேசபக்திமிக்க தொழிலதிபர்.

முதன்முறையாக கம்யூனிஸ்ட் அறிக்கையை இந்திய மொழியில் வெளியிட்ட பெருமை இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவராகிய முசாபர் அகமதுவையே சேரும். 
இவர், தாம் ஆசிரியராக இருந்த "ஞானவாணி" இதழில் 1926 ஆகஸ்ட் 12 முதல் 1927 ஜூலை 21 வரை தொடர்ச்சியாக வெளியிட்டுவந்தார். 

கம்யூனிஸ்ட் அறிக்கையை வங்க மொழியில் மொழிபெயர்த்து வழங்கியவர் மகாகவி இரவீந்திரநாத் தாகூரின் பேரன் சௌமியேந்திரநாத் தாகூர்.அடுத்து, 1927-இல் உருது மொழியில் அல்ஹிலால் என்ற வாரப் பத்திரிகையில் அறிக்கையின் முக்கியப் பகுதிகள் வெளியிடப்பட்டன. 

இந்த இதழின் ஆசிரியர் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராகிய அபுல்கலாம் ஆசாத். உருதுவில் மொழியாக்கம் செய்தவர் சுதந்திரப் போராட்ட வீரரான அப்துற் ரசாக் மலிஹாபாடி.

1931-இல் கம்யூனிஸ்ட் அறிக்கை மராத்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. மொழிபெயர்த்தவர், பின்னாளில் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவராக விளங்கிய ஜி.எம்.அதிகாரி.

தமிழில்...

அதே 1931-இல் கம்யூனிஸ்ட் அறிக்கை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, ஈரோட்டிலிருந்து வெளிவந்த ஈ.வெ.ரா. பெரியாரின் "குடிஅரசு" இதழில் தொடராக வெளிவந்தது. 
சமதர்ம அறிக்கை என்ற பெயரில் தொடர்ந்து ஐந்து வாரங்கள் வெளிவந்தது.

1932-ஆம் ஆண்டு மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் இடப்பள்ளி கருணாகர மேனனின் மொழிபெயர்ப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.இவர் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் யுத்தமும் சமாதானமும், குற்றமும் தண்டனையும் என்ற நூல்களை மொழிபெயர்த்தவர்.1933-இல் கம்யூனிஸ்ட் அறிக்கை தெலுங்கில் வெளியிடப்பட்டது.

 தட்டச்சு செய்து சைக்ளோ ஸ்டைல் இயந்திரத்தில் பிரதிகள் எடுத்து கட்சி ஊழியர்களுக்குச் சுற்றுக்கு விடப்பட்டது. 
தெலுங்கில் மொழிபெயர்த்தவர் பெரும் புகழ்வாய்ந்த கம்யூனிஸ்ட் தலைவரும் வீரத் தெலுங்கானா போராட்ட தளபதியுமான பி.சுந்தரய்யா.அடுத்து குஜராத்தி, இந்தி மொழிகளில் 1934-லும், ஒரியா மொழியில் 1936-லும், பஞ்சாபி மொழியில் 1944-லும் அறிக்கை வெளியிடப்பட்டது.அதற்குப் பிறகு 1948-இல் தமிழில் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளிவந்தது. 

தமிழாக்கியவர் எம்.இஸ்மத் பாட்சா. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனசக்தி வெளியீட்டகம் இதை வெளியிட்டது.

1975-இல் கம்யூனிஸ்ட் அறிக்கை ரா.கிருஷ்ணையாவின் தமிழாக்கத்தில் மார்க்ஸின் இரண்டு முன்னுரைகளுடனும் ஏங்கெல்ஸின் ஐந்து முன்னுரைகளுடனும், பல விளக்கக் குறிப்புகளுடனும் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்டது.

இன்று, எஸ்.வி. ராஜதுரையின் தமிழாக்கத்தில் அறிமுகவுரையுடனும் விளக்கக் குறிப்புகளுடனும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது. மார்க்ஸ் - ஏங்கெல்ஸின் புரட்சிகர கம்யூனிஸ்ட் அறிக்கை உலகின், இந்தியாவின் எல்லா மொழிகளிலும் உள்ளன. 

உலகெங்கும் இந்த அறிக்கை வாசிக்கப்படுகிறது. 

இன்றும் இந்த அறிக்கை தெளிவான, உத்வேகமிக்க, புதியதொரு சமுதாய நல்வாழ்வுக்கு வழிகாட்டும் ஞானவிளக்காகத் திகழ்கிறது.
                                                                                                                  
                                                                                                                                                                                           - தி.வரதராசன்.
நன்றி:தீக்கதிர் 
=========================================================================================================================================

வெள்ளி, 17 மார்ச், 2017

ஒன்றையாவது வெட்டி அழிப்பது அவசியம்.

கடந்த 1950 ஆம் ஆண்டு விறகிற்காக அதிகளவில் காடுகள் அழிக்கப்பட்டன. 
இதனால் இயற்கை வளம் பாதிக்கப்பட்டு வறட்சி ஏற்படும் சூழ்நிலை நிலவியது. இதனை தடுப்பதற்காக, விறகுகளுக்கு என தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவினை பூர்விகமாக கொண்ட சீமை கருவை (Prosopis Juliflora) விதைகள் ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் முழுவதும் வானூர்திகள் மூலம் தூவப்பட்டன.
 அப்போது இதன் விளைவுகள் பற்றி அறியாததால் அரசே இதனை முன்னின்று இந்தத் திட்டத்தை நடத்தியது. 
அதன் விளைவு ஏறத்தாழ தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு பரவிய சீமை கருவை தற்போது 25 சதவீத நிலங்களை ஆக்கிரமித்து உள்ளது.
இதனை வேருடன் களையாவிட்டால் நிலத்தடி நீரும் முழுமையாக குறைந்து எதிர்கால சந்ததியினருக்கு தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என சுற்றுப்புறசூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 
இந்த சீமைக் கருவேல மரமானது வறண்ட நிலத்திலும், எந்த தட்ப வெப்ப சூழலிலும் வளரும் தன்மை கொண்டது. 
நம் மாநிலத்தின் இன்றைய வறட்சியான நிலைக்கு இந்த மரங்களும் ஒரு முக்கிய காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை என அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
இந்தக் கருவேல மரங்கள் எந்தவித வறட்சியிலும், கடும் கோடையிலும் நன்கு வளரக்கூடியது. 
மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவைகளுக்கு பிரச்சனை இல்லை. ஏனெனில் ஒரு கருவேலமரம் தனது வேர்களை பூமியின் ஆழத்தில் நாற்பது அடி, அகலத்தில் நாற்பது அடி வரையில் அனுப்பி நிலத்தடி நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது.
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை. 
ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி இருக்கும் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையும் இம்மரம் உறிஞ்சி விடுகிறது.
இதை அறியாமல் மக்கள் இன்னும் இம்மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள். தங்கள் வீடுகளுக்கும், வயல்களுக்கும் வேலியாக இம்மரத்தை நட்டு வைகிறார்கள். 
வணிக ரீதியாக இராமநாதபுர மாவட்டத்தில், விறகிற்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர். 
இது பேராபத்தை இந்த மண்ணுக்கு செய்கிறது என்பதை அவர்கள் அறியாது இருக்கிறார்கள்.
 இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது.
முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது. இது கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும் அதுதான் கவலைத்தரக்கூடிய உண்மை என சுற்றுப்புறசூழல் ஆர்வலர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். 
இம்மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவது இல்லை. 
காரணம் என்னவென்றால் இந்த சீமைக் கருவேல மரங்கள், பிராணவாயுவை மிகக் குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது, ஆனால் கரியமிலவாயுவை மிக அதிக அளவில் வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுத் தன்மையாக மாறிவிடுகிறது.
மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட, இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்.
அமெரிக்க தாவரவியல் பூங்கா, வளர்க்க கூடாத நச்சு மரங்கள் என்று ஒரு தனிபட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது இந்த சீமை கருவேல மரம்தான். 
அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பைக் காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் முக்கிய செய்தி.
                                                                                                                                               - ராமானுஜம்

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...