bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 18 பிப்ரவரி, 2015

உடலுக்கேற்ற உடற்பயிற்சி !

ஒவ்வொரு மனிதன் மட்டுமல்ல ஒவ்வொரு  உடலும் ஒரு தனிரகம். 
எனவே ஒருவரின் உடலுக்கேற்ற உடற்பயிற்சியை செய்வதே உரிய பலன் தரும். அப்படியானால் உங்கள் உடலுக்கேற்ற உடற்பயிற்சி எது? தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.
உங்கள் உடல்வாகு என்பது நினைத்தமாத்திரத்தில் எடைகூடிவிடும் ரகமா? அல்லது எவ்வளவு சாப்பிட்டாலும், உடற்பயிற்சி எதுவும் செய்யாவிட்டால்கூட உங்களுக்கு உடல் எடையே கூடாத ரகமா?
ஒவ்வொரு மனித உடலும் தனித்தனித் தன்மை கொண்டது.
அதாவது ஒவ்வொருவரின் கைரேகையும் ஒரு விதம் என்பதைப்போல தனித்துவமானது.
ஆனாலும் மனித உடல்வாகை எலும்புகளின் அளவு, சதைகளின் தன்மை மற்றும் கொழுப்பின் அளவு ஆகியவற்றை கணக்கில் எடுத்து பொதுவான மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்க முடியும்.
அந்த அடிப்படையில் பார்க்கும்போது உங்கள் உடலுக்கு உகந்த உடற்பயிற்சி எது என்பது, உங்கள் உடல் குறித்த உங்களின் புரிதலைப் பொறுத்தது.
“இதில் பிரச்சனை என்னவென்றால் ஒருவருக்கு என்னவிதமான உடற்பயிற்சி தேவை என்று விவாதிக்கும்போது இரண்டு காரணிகள் ஒன்றுக்கொன்று நேர் எதிரில் நின்று முரண்படுகின்றன”, என்கிறார் ஸ்பெய்னில் இருக்கும் அல்டோ ரெண்டிமிய்ண்டோ விளையாட்டு விஞ்ஞான மையத்தின் பேராசிரியர் ஜூவான் பிரான்ஸிஸ்கோ மார்க்கோ.
உடற்பயிற்சி மூலம் நீங்கள் உங்கள் உடல் வனப்பை அழகுப்படுத்த விரும்புகிறீர்களா அல்லது விளையாட்டுத்திறமையை மேம்படுத்தப் பார்க்கிறீர்களா என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும் என்கிறார் அவர்.
ஒருவரின் மரபணுக்காரணிகள் மற்றும் உடலின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் மனித உடலை மூன்று பிரிவுகளாக பிரிக்கிறார்கள் உடலியலாளர்கள்.

எக்டோமார்ப்
“இந்த ரக மனிதர் உயரமானவர், ஒல்லியானவர், முன்னோக்கி சாயும் தன்மை கொண்டவர். நீண்ட கால்களும், சதைப்பற்றில்லாத மார்புப்பகுதியும் கொண்டவர்.
இவர்களின் உடம்பில் பெரும்பாலும் சதை போடாது. என்கிறார் பேராசிரியர் மார்கோ.
இப்படிப்பட்ட எக்டோமார்ப் உடல்வாகு கொண்டவர்களுக்கு நீண்ட நேரம் தாக்குப்பிடித்து நிற்கும் உடல் திறன் தேவைப்படும் தடகளப்போட்டிகள் பொருத்தமான விளையாட்டுக்களாக இருக்கும்.
நீச்சல், சைக்கிள் போட்டிகள் போன்றவை.
இப்படிப்பட்ட உடல்வாகு கொண்டவர்களுக்கேற்ற உடற்பயிற்சியின் முக்கிய நோக்கம் உடல் வலிமையை மேம்படுத்துவதாகவும், உடல் எடையை அதிகப்படுத்தி உடற்சதையை கூட்டுவதாகவும் இருக்க வேண்டும்.
இப்படிப்பட்டவர்கள் தங்களின் உடல் மூட்டுக்களை அதிகம் அசைக்கும் விதமான உடற்பயிற்சிகளை செய்யவேண்டும்.
அதன் மூலம் அவர்களின் உடலின் பெருஞ்சதைப் பகுதிகளும், சிறு சதைக் குழுமங்களும் கூடுதலாக செயற்பட்டு வலுப்பெறும்.
இப்படிப்பட்டவர்கள் அதிகபட்சமாக மூச்சுப்பயிற்சி தேவைப்படும் ஏரோபிக் உடற்பயிற்சிகளை குறைவான அளவில் செய்வது நல்லது.
 காரணம் இப்படிப்பட்டவர்கள் ஏரோபிக் உடற்பயிற்சிகள் அதிகம் செய்தால் அவர்களின் உடல் எடை குறைவதோடு, உடல் சதை கூடுவதும் நின்றுவிடும் .
எண்டோமார்ப்
இந்த ரக உடல்வாகு என்பது எக்டோமார்ப் உடல் வாகுக்கு நேர் எதிரான உடல்வாகு. இவர்களின் உயரம் குறைவாகவும், உடலின் மத்தியப்பகுதியில் அதிக சதைப்பிடிப்புடனும் இருப்பார்கள்.
இந்த ரக உடலின் உணவு செரிபடும் உள்ளியக்கம் மெதுவாக நடப்பதால், உண்ணும் உணவின் கொழுப்புச் சத்து உடலில் செரிபடாமல் எளிதாக கொழுப்பாகவே தங்கிவிடும்.
இப்படிப்பட்டவர்கள் மிக எளிதில் எடைகூடி, உடல்பருமனாகிவிடுவார்கள்.
இப்படிப்பட்ட உடல்வாகு கொண்டவர்கள் உடல் வலிமை மட்டுமே தேவைப்படும் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட முடியும். காரணம் இவர்களின் உடலின் கூடுதலான சதைப்பிடிப்புத் தன்மை இத்தகைய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயற்பட உதவும்.
இப்படிப்பட்ட உடல்வாகுடையவர்களுக்கு மூச்சுக்குழல் கட்டமைப்பை வலுவாக்கும் வகையான உடற்பயிற்சிகளே நன்மை பயக்கும்.

இப்படிப்பட்டவகள் முதலில் சாதாரண ஏரோபிக் உடற்பயிற்சிகளை செய்துவிட்டு பிறகு அனேரோபிக் உடற்பயிற்சிகள் எனப்படும் அதிதீவிர உடற்பயிற்சிகளை வேகமாக செய்யவேண்டும்.
இதன் மூலம் இவர்களின் மூட்டுக்கள் வேகமாக செயற்படும்.
எக்டோமார்ப் உடல்வாகுடையவர்கள் எளிமையான உடற்பயிற்சிகளை, கூடுதல் இடைவெளிவிட்டு செய்யவேண்டும்.
 ஆனால் அதற்கு நேர் மாறாக, எண்டோமார்ப் உடல்வாகுடையவர்கள் கூடுதல் வேகத்துடன், கடினமான உடற்பயிற்சிகளை செய்வதே நல்லது, .
இப்படிப்பட்ட உடல்வாகுடையாவர்களுக்கு பொருத்தமான விளையாட்டுக்கள் என்று பார்த்தால், உடலின் வலிமை, சக்தி, சமநிலை ஆகியவை அதிகம் தேவைப்படக்கூடிய பளுதூக்கும் போட்டிகள், மல்யுத்தம் போன்றவை இவர்களுக்கு ஏற்ற விளையாட்டுப் போட்டிகள் .
அதேசமயம், இந்த ரக உடல்வாகுடையவர்கள் உடற்பயிற்சி செய்யும்போது சிலவற்றை கவனத்தில் கொள்வது நல்லது.
உடற்பயிற்சியின் மூலம் நாம் செய்யவிரும்புவது என்னவென்றால், ஒரு பக்கம் படிப்படியாக உடலின் சதைப்பிடிப்பை வலிமைப்படுத்துவது.
மறுபக்கம் உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பின் அளவைக்குறைப்பது. இதை நாம் முறையான விகிதத்தில், சரியான முறையில் செய்யவில்லை என்றால், மோசமான குண்டான உடல்வாகுடனானவர்களை உருவாக்கிவிடும் ஆபத்திருக்கிறது.
உளவியல் அடிப்படையில் பார்த்தால் இந்த உடல்வாகுடையவர்கள் மிகவும் பலவீனமானவர்கள்.
இவர்களை தாமாகவே முன்வந்து தம்மை மேம்படுத்திக்கொள்ள மாட்டார்கள். தோல்வியை கண்டு எளிதில் துவண்டுவிடுவார்கள்.
அல்லது தமது செயல்களுக்கு உரிய பலன்கள் உடனடியாக கிடைக்காவிட்டாலும் இவர்கள் எளிதில் சோர்ந்துவிடுவார்கள்  .
மெசோமார்ப்
உடல்வாகு அடிப்படையில் பார்த்தால் இவர்கள் தாம் மிகவும் சாதகமான அம்சங்களைக்கொண்டவர்கள்.
இப்படிப்பட்டவர்கள் எந்த பெரிய முயற்சியும் செய்யாமலே தடகள விளையாட்டு வீரருக்கு உண்டான உடல்வாகுடன் தோன்றுவார்கள்.
மெசோமார்ப் உடல்வாகுடையவர்கள் இயற்கையிலேயே விளையாட்டு வீரர்கள். இவர்கள் எதைச் செய்தாலும் அதை சிறப்பாக செய்வார்கள், .
கால்பந்து விளையாட்டு வீரர்கள் நினைத்த மாத்திரத்தில் திடீரென பேட்ல் எனப்படும் உள்ளரங்கு டென்னிஸ் விளையாட்டை ஆடத்துவங்குவார்கள். அதையும் சிறப்பாக ஆடுவார்கள்.
அவர்களால் கூடைப்பந்து விளையாட்டைக்கூட சிறப்பாக ஆட முடியும். நீடித்து தாக்குப்பிடிக்கும் விளையாட்டுக்களானாலும் சரி, வேகமாக ஓடும் ஓட்டப்பந்தயமானாலும் சரி அவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் .

இப்படிப்பட்ட உடல்வாகுடையவர்களுக்கு சரியான உடற்பயிற்சி என்பது உடல் வலிமையையும், சக்தியையும் அதிகப்படுத்துவனவாக இருக்க வேண்டும்.
மேலும் சதைகளை வலிமைப்படுத்தும் உடற்பயிற்சிகளும், மூச்சுப்பயிற்சியை மேம்படுத்தும் உடற்பயிற்சிகளும் சம விகிதத்தில் இவர்கள் மாறி மாறிச் செய்யவேண்டும்.
டென்னிஸ், கால்பந்து, படகுப்போட்டிகள் மற்றும் டிரயத்லான் போன்றவை இத்தகைய உடல்வாகுடையவர்களுக்கு மிகவும் பொருத்தமான விளையாட்டுக்கள்.

மேசோமார்ப் உடல்வாகுடையாவர்கள் இவ்வளவு சாதகமான அம்சங்களை கொண்டிருந்தாலும், இவர்கள் தங்களின் உணவில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.
 காரணம் இவர்கள் உணவில் உரிய கவனம் செலுத்தாவிட்டால், இவர்களின் உடல் கொழுப்பு கூடிவிடும்.
எண்டோமார்ப் உடல்வாகுடையவர்களைப் போல இவர்கள் விரைவாக உடல்கொழுப்பை சேமித்துக் கொள்ளமாட்டார்கள் என்றாலும், இவர்கள் உணவில் கவனம் செலுத்தாவிட்டால் உடல் கொழுப்பு சேர்ந்துவிடும் . அதேசமயம், எக்டோமார்ப் உடல்வாகுடையவர்களைப் போல இவர்கள் என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டு, எளிதில் செரித்துவிடக்கூடியவர்களும் அல்ல.

எனவே உங்களின் உடல்வாகு என்னவகையானது என்பதை முதலில் புரிந்துகொள்வது அவசியம்.
அதேசமயம், ஒரு வகையான உடல்வாகுடையவர்களுக்கு பரிந்துரை செய்யப்படும் உடற்பயிற்சிகளை மற்றவர்கள் செய்யக்கூடாது என்றும் இல்லை.
எந்த உடற்பயிற்சிகளை, எந்த அளவுக்கு, என்னமாதிரியான இடைவெளியில் செய்யவேண்டும் என்பதே முக்கியமாக தெரிந்துகொள்ளவேண்டிய செய்தி.
இதில் முக்கியமான விஷயம் உங்களின் நோக்கம் என்ன என்பதில் உங்களுக்கு தெளிவு இருப்பது அவசியம்.
 உங்கள் நோக்கம் உடல் வனப்பை அதிகரிப்பதா?
அல்லது விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதா?
உங்கள் தேவை என்ன என்பதை நீங்கள் முடிவு செய்துவிட்டீர்கள் என்றால், அதற்கேற்ற உடற்பயிற்சியையும், உணவுப்பழக்கத்தையும் உருவாக்க முடியும் என்பதே உடற்பயிற்சி நிபுணர்கள் சொல்லும் அறிவுரை.

முஸ்லிம் பத்திரிகையின் லொள்ளு?




நெதர்லாந்தில் இருந்து வெளிவரும் முஸ்லிம் பத்திரிகை ஒன்று ,
 "பாலியல் கவர்ச்சி" கொண்ட இறைதூதர் முகமது நபி என்று அது வர்ணிக்கும் முகமது நபியின் மற்றொரு பக்கமான அவரது பாலியல் கவர்ச்சி குறித்த ஒரு சிறப்பு பதிப்பை வெளியிடவிருப்பதாகக் கூறியுள்ளது .
 ஒரே ஒரு முறை வெளியிடப்படவுள்ள பதிப்பு, பாரிஸில் சார்லி எப்தோ இதழ் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை அடுத்து இஸ்லாம் குறித்து பரவியிருக்கும் பொதுவான தவறான புரிதல்களை மாற்றும் நோக்கிலானது என்று அந்தப் பத்திரிகையில் பிரசுரகர்த்தர்கள் கூறுகின்றனர்.
முகமது  நபியின் ஆளுமை குறித்த மற்றுமொரு பகுதியை, அதாவது , அவரது பாலியல் கவர்ச்சியை, இந்த வழக்கத்துக்கு மாறான பதிப்பு வெளிக்கொண்டு வரும் என்று இந்தப் பத்திரிகையின் பொறுப்பாசிரியர் , பிராஹிம் பூரிக் கூறுகிறார்.
"முஸ்லீம்கள், தங்களது குழந்தைகளுக்கு இஸ்லாத்தின் உண்மையான செய்தியை பற்றிய நல்ல புரிதலைத் தரவேண்டிய கடப்பாடு உண்டு.அதற்கு இந்த சிறப்பிதழ் உதவும்" என்று பூரிக் சொல்கி றார்.
இந்த பத்திரிகையின் இந்தச் சிறப்பிதழ் ரமலான் நோன்பு மாதத்தை ஒட்டி 2015ஜூன் மாதத்தில் விற்பனைக்கு வரும் என்று பத்திரிகையின் ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
நன்றி:பிபிசி தமிழ்

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

அழைப்பது எமனாக இருக்கலாம்




எத்தனையோ முறை எத்தனையோ பேர்கள் சொன்னாலும் எனக்கு அலைபேசியை சார்ஜ் போடும்போது அழைப்புகள் வந்தால் அப்படியே எடுத்து பேசும் கெட்டப் பழக்கம் இருந்து வந்தது.

அதற்கு உண்மையான காரணம் சோம்பேறித்தனம்தான்.
பின்னே?

மின் இணைப்பை துண்டித்து விட்டு சார்ஜரில் இருந்து தனியே அலைபேசியை எடுத்து பேசி விட்டு மீண்டும் இணைப்பு கொடுக்க சோம்பேறித்தனம் பட்டுத்தானே இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தத பலர் வரம்பு மீறி நடந்து கொள்ளுவதற்கு பேர் என்ன?

. பெரும்பாலும் இது போன்ற செயல்கள் விபரீதத்தில் தான் முடிகின்றன. ஆனால் கர்நாடக மாநிலம் மைசூரில் சமீபத்தில் நடந்தேறிய ஒரு விபரீதத்தை யும் அதில் மாட்டிக்கொண்ட வாலிபர் படத்தையும் பார்த்ததும் அலைபேசியை சும்மா எடுத்து பேசவே பயமாக இருக்கிறது.

பீகார் மாநிலத்தை சேர்ந்த சீதாராம் என்ற 18 வயது வாலிபர், வயிற்றுப் பிழைப்புக்காக கூலி வேலை தேடி மைசூர் நகருக்கு வந்துள்ளார். இங்குள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை செய்தபடி, பணி நடைபெறும் கட்டிட வளாகத்தில் தங்கியுள்ளார்.

இவரது செல்போன் ஒரு அழைப்பு வந்தது.

சார்ஜர் மூலம் செல்போன் பேட்டரிக்கு மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த நிலையில் அந்த அழைப்புக்கு பதில் சொல்லும் அவசரத்தில் சார்ஜர் இணைப்பில் இருந்து செல்போனை விடுவிக்காமலேயே ஆன் செய்து அவர் ஹலோ சொல்ல முயன்ற போது பயங்கர சத்தத்துடன் செல்போன் பேட்டரி வெடிகுண்டு போல் வெடித்து சிதறியது.

இதில் சீதாராமின்  முகம் சிதைந்தது.

அ வரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த நண்பர்கள் பணியாளர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர்.

அங்கு அளிக்கப்பட்ட அவசரச் சிகிச்சையில் அவரது தொடை பகுதி தோலை எடுத்து முகத்தில் ஒட்டி தையல் போட்ட மருத்துவர்கள், கீழ் தாடை பகுதியின் முக்கிய எலும்பு சேதம் அடைந்து நொறுங்கி விட்டதால் முக சீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்து விட்டாலும், முன்னர் இருந்த அந்த அழகிய முக அமைப்பை அந்த வாலிபர் மீண்டும் பெற பல லட்சம் ரூபாய் செலவும், பல ஆண்டு கால காத்திருப்பும் அவசியம் என தெரியவந்துள்ளது.

இத்தனை ஆண்டு காத்திருப்புக்கு பதிலாக ஒரு நிமிடம் யோசித்து, சார்ஜர் இணைப்பில் இருந்து செல்போன் துண்டித்து விட்டு வந்த அழைப்புக்கு பதில் அளித்திருந்தால் அந்த நபருக்கு இந்த பரிதாப நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை.

இந்த துயரம் அந்த நபருடன் முடிந்துப் போகவும், உலகில் வேறு யாருக்கும் இந்த விபத்து நடைபெறாமல் இருக்க இந்த செய்தியை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்துவதுடன் நீங்களும் சார்ஜரில் செல்போன் இணைக்கப்பட்டிருக்கும் நேரத்தில் எந்த ஒரு அழைப்பு வந்தாலும் இணைப்பை துண்டித்து விட்டு பேசுங்கள்.

அல்லது சோம்பேறித்தனமாக இருந்தால் எடுக்கவே வேண்டாம் சார்ஜ் முடிந்த பின்னர் பேசிக்கொள்ளுங்கள்.

வாகனம் ஓட்டும் போது மட்டுமல்ல சார்ஜ் ஏற்றும் போது கூட அழைப்பது எமனாக இருக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டிய நிலை உண்டாகியுள்ளது.

==========================================================================

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

சி.ஐ.ஏ,.

உலக நாடுகளின் மக்களின் தனி மனித உரிமையை ,நடுநிலையை காக்கும் பெரியண்ணன் அமெரிக்காவின் உளவுத்துறை சி.ஐ.ஏ,.
சி.ஐ.ஏ சித்திரவதை
 “ஆஹா, இதுதான் ஜனநாயகம்! இதுதாண்டா மனித உரிமை”

தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செயப்பட்டு சிறையிடப்பட்டுள்ள விசாரணைக் கைதிகளைக் கொடூரமாக வதைக்கும் சி.ஐ.ஏ.-வின் சித்திரவதைகள் குறித்து அண்மையில் வெளிவந்துள்ளது  அமெரிக்க செனட் அறிக்கை,
 உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளால் நடத்தப்பட்டுவரும் ஆக்கிரமிப்புப் போரையும், சித்திரவதைகளையும் மட்டுமின்றி, இச்சித்திரவதைகள் அமெரிக்க அரசுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் தெரிந்தேதான் நடந்துள்ளன என்ற உண்மையையும் இந்த செனட் அறிக்கை அம்பலமாக்கியிருக்கிறது.
விசாரணைக் கைதிகளை நிர்வாணப்படுத்தி வதைப்பது, பல நாட்களுக்குத்  தூங்கவிடாமல் தொடர்ந்து சித்திரவதை செவது, மலக்குழாய் வழியாக உணவை வலுக்கட்டாயமாகச் செலுத்தி வதைப்பது, வாட்டர் போர்டிங் எனப்படும் நீரில் மூழ்கடித்துச் சாவின் விளிம்புவரை கொண்டு சென்று வதைப்பது, நடுங்கவைக்கும் குளிரில் நீண்டநேரம் நிற்க வைப்பது, குறுகிய சங்கிலியின் மீது பல மணி நேரம் குனிந்தே நிற்க வைப்பது, நாய்களைக் காதருகே குரைக்கவிட்டு அச்சுறுத்துவது, சுவரில் கைதியைத் தூக்கிவீசி அறைவது, பெட்டிக்குள் கை, கால்களை மடக்கி நீண்ட நேரத்துக்கு உட்கார வைப்பது, சவப்பெட்டிக்குள் அடைத்து வைத்து மூச்சுத் திணற வைத்து வதைப்பது, பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கி வதைப்பது, விசாரணைக் கைதிகளது குடும்பத்தாரையும், அண்டை வீட்டாரையும் மிரட்டி வதைப்பது-என அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. நடத்தியுள்ள கொடூரமான சித்திரவதைகள் இன்று பகிரங்கமாக வெளிவந்து உதிரத்தையே உறைய வைக்கின்றன.
அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்
“காலவரையற்ற சட்டவிரோதக் கைதுகளை ரத்து செய்! விசாரணைக் கைதிகள் மீது வழக்கைப் பதிவு செய்! அல்லது விடுதலை செய்!” என்ற முழக்கத்துடன், விசாரணைக் கைதிகளைப் போல வேடமணிந்து மனித உரிமை அமைப்பினர் அமெரிக்காவில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

அமெரிக்காவில் இத்தகைய சித்திரவதைகளை நடத்தினால் அம்பலமாக நேரிடும் என்பதால், தனது விசுவாச – கைக்கூலி நாடுகளில் இரகசிய வதைக்கூடங்களை அமைத்து, சந்தேகிப்போரை இரகசியமாக கடத்திச் சென்று, இக்கொடூரங்களை கிரிமினல்தனமாக  சி.ஐ.ஏ.வும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும் நடத்தியிருக்கின்றனர். அமெரிக்காவுக்கும் அதன் விசுவாச கைக்கூலி நாடுகளுக்குமிடையே ஒரு இரகசிய ஒப்பந்தம் போட்டுக் கொள்ளப்பட்டு, அதன் படியே இத்தகைய வதைமுகாம்கள் அமெரிக்காவுக்கு வெளியே வைத்து இயக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த ஆஃபியா சித்திகி என்ற பெண் மருத்துவ விஞ்ஞானி கடந்த 2003-ம் ஆண்டில் அமெரிக்கா சென்றிருந்தபோது ‘காணாமல்’ போனார். அவர் ஒரு பயங்கரவாதி  என்று முத்திரை குத்தி சி.ஐ.ஏ.வால் கடத்தப்பட்டு பல ஆண்டுகளாக வெளியுலகுக்கே தெரியாமல் ஆப்கானிலுள்ள அமெரிக்க சித்திரவதைக் கூடமான பாக்ராம் விமான தளத்தில் அடைக்கப்பட்டு, மிருகத்தனமான சித்திரவதைக்கும் பாலியல் வன்முறைக்கும் ஆளான கொடூரத்தை பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஒருவர் வெளிக்கொணர்ந்தார். முஸ்லிமாகப் பிறந்ததைத் தவிர அந்தப் பெண் வேறெந்தக் குற்றத்தையும் செயவில்லை.
அபு சுபைதா என்ற இஸ்லாமியர் போலந்து நாட்டின் எல்லையில் உள்ள இரகசிய வதைமுகாமில் வைத்து வாட்டர் போர்டிங் எனும் தண்ணீரில் மூழ்கடிக்கும் சித்திரவதையால் உடலெல்லாம் விறைத்து மரக்கட்டையாகி வாயிலிருந்து நுரை தள்ளும் வரை அவரை 12 ஆண்டுகளாக வதைத்துள்ளதை அவரது வழக்குரைஞர் அண்மையில் அம்பலப்படுத்தியுள்ளார். இப்படித்தான் கியூபா அருகே குவாண்டநாமோ விரிகுடாவில் உள்ள சி.ஐ.ஏ.வின் இரகசிய கொட்டடியிலும், மிதக்கும் சிறைச்சாலை எனும் கப்பல்களிலேயே உருவாக்கப்பட்டுள்ள இரகசிய சிறைக் கொட்டடிகளிலும் பலர் வதைக்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய இரகசிய ஆட்கடத்தல் – சித்திரவதைகள் நடந்துள்ளதைப் பற்றி ஏற்கெனவே சில மனித உரிமை அமைப்புகளும், தன்னார்வக் குழுக்களும், ஐரோப்பிய நாடாளுமன்றம் அமைத்த விசாரணைக் குழுவும், விக்கி லீக்சும் அம்பலப்படுத்தியுள்ளன. அமெரிக்காவின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான குரல்கள் வலுவடைந்துள்ள நிலையில், நம் நாட்டின் விசாரணைக் கமிசன் அறிக்கை போல நீர்த்துப்போன வழியில் இப்போது இந்த அறிக்கை வெளியாகியிருக்கிறது.
இச்சித்திரவதைகளை ஏதோ கொள்கையில் நேர்ந்த தவறு போலத்தான் செனட் குழுவின் அறிக்கை கூறுகிறது. ஆனால், வரலாற்று ரீதியாகவே சி.ஐ.ஏ. என்பது பிற நாடுகளை உளவு பார்க்கவும், பயங்கரவாதப் படுகொலை – சித்திரவதைகளுக்காகவும் உருவாக்கப்பட்ட நிறுவனம் என்பதே உண்மை. இதனால்தான் 6700 பக்கங்களைக் கொண்ட செனட் அறிக்கையில் தற்போது 500 பக்க அளவுக்கு வடிகட்டப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டு, ஏனைய பக்கங்கள் இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகுதான் இத்தகைய சித்திரவதைகள் நடந்துள்ளதாகக் கூறப்பட்டாலும், அது ஒட்டுமொத்த சித்திரவதைகளில் ஒரு சிறு கூறுதான்.
ஆக்கிரமிப்புப் போரும், கொடிய சித்திரவதைகளும் ஏகாதிபத்தியத்தின் பிரிக்கமுடியாத அங்கங்கள். கொலைக் குழுக்களைக் கட்டியமைத்து இதுவரை அறிந்திராத கொடூரமான சித்திரவதைகளை வியட்நாம் போரில் அமெரிக்க ஏகாதிபத்தியம் கட்டவிழ்த்துவிட்டது.
ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் தலைவர்களை அது படுகொலை செய்ததோடு, முன்னணியாளர்களைக் கடத்திச் சென்று காட்டுமிராண்டித்தனமாகச் சித்திரவதை செய்து கொன்றுவிட்டு, காணாமல் போனதாக அறிவித்தது.
அமெரிக்காவின் மேலாதிக்கத்துக்கு உடன்படாத அல்லது அமெரிக்காவை எதிர்க்கும் நாடுகள் இத்தகைய சித்திரவதைகளைச் செய்துள்ளதாக செய்திகள் கசிந்தால், அதையே முகாந்திரமாக வைத்து மனித உரிமைகளை மீறிவிட்டதாகக் கூப்பாடு போட்டு அந்நாட்டின் மீது இந்நேரம் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்திருக்கும். அல்லது பொருளாதாரத் தடைகளை விதித்து அந்நாட்டை முடமாக்கி அடிமைப்படுத்தியிருக்கும்.
ஆனால், அமெரிக்க ஏகாதிபத்தியம் இத்தகைய சித்திரவதைகளைச் செய்திருப்பதால், அது பயங்கரவாதத்துக்கு எதிரான செயலாகவும் தேசிய பாதுகாப்புக்கான அவசியமான நடவடிக்கையாகவும் நியாயப்படுத்தப்படுகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக போலீசுக் கொலைகள், போர்க் குற்றங்கள், உளவுத்துறையின் கொலைகள், நிதி மோசடிகள் பற்றிய எந்த விசாரணையும் அமெரிக்காவில் நடத்தப்பட்டதில்லை.
 எந்தக் குற்றவாளியும் வழக்கு மன்றத்தில் நிறுத்தப்பட்டதுமில்லை.
ஜனநாயக நாடகமாடும் ஒபாமா ஆட்சியில், பாகிஸ்தானின் மேற்குப் பகுதியிலும் ஆப்கானிஸ்தானிலும் ஆளில்லா போர் விமானங்களைக் கொண்டு கொத்துக்கொத்தாக அப்பாவி மக்களைக் கொன்றொழித்த போதிலும் கூட, இக்கொடூரத்துக்கு எதிராக எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.
அமெரிக்க சி.ஐ.ஏ விசாரணை யை அம்பலப்படுத்தும் திரைப்படம்.
ஏனெனில், அவர்கள் அமெரிக்க அரசியல் தலைவர்களால் பாதுகாக்கப்படுகின்றனர்.

அமெரிக்க பட்ஜெட்டில் பல நூறு கோடி டாலர்களை கொலைகார சி.ஐ.ஏ.வுக்கு ஒதுக்கி வருவதை அவர்கள் அங்கீகரித்தே வருகின்றனர்.
 இதனால்தான் புஷ் ஆட்சிக் காலத்தில் துணை அதிபராக இருந்த டிக் செனியும், சி.ஐ.ஏ. இயக்குனரான ஜான் ப்ரென்னனும், வெள்ளை மாளிகையின் வழக்குரைஞர்களும் நாட்டின் நலன் கருதி, மனித இனத்துக்குப் பேரழிவை ஏற்படுத்தும் பயங்கரவாதிகளுக்கு எதிராக இத்தகைய சித்திரவதைகள் தவிர்க்கவியலாத தேவை என்று இன்றும்கூட திமிராகக் கொக்கரிக்கின்றனர்.
வடிவங்களில் வேறுபட்டாலும் சாராம்சத்தில் ஏகாதிபத்தியம் என்பது இப்படித்தான் இருக்க முடியும்.
பெருமையாக பீற்றிக் கொள்ளப்படும் முதலாளித்துவ ஜனநாயகம், மனித உரிமைகளின் யோக்கியதையையும், முதலாளித்துவ ஜனநாயகம் என்பதே மோசடி ஜனநாயகம்தான் என்பதையும்  இப்போது செனட் குழுவின் அறிக்கையே அம்பலப்படுத்திக் காட்டிவிட்டது.
 இந்த யோக்கிய சிகாமணிகள்தான் கம்யூனிசம் என்றால் சர்வாதிகாரம், அடக்குமுறை என்றெல்லாம் இன்னமும் வெட்கமின்றிப் பிதற்றிக் கொண்டிருக்கின்றனர்.
‘புனிதமான முதலாளித்துவத்தின் உறைவிடங்கள்’ என்று தூக்கிப் பிடிக்கப்படும் ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து போன்ற நாடுகளும், ஆஸ்திரேலியா,  கனடா போன்ற சுதந்திரத்தின் விளக்குகளும், ஆஸ்திரியா, பெல்ஜியம்,  ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல்,  ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற முன்னேறிய ஐரோப்பிய நாடுகளும் திரைமறைவில் சி.ஐ.ஏ.வுக்கு செய்து கொடுத்த கொடூரங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்க உளவுத் துறைக்கு தம் நாட்டில் சிறைகளை ஏற்படுத்திக் கொடுத்தல், உளவுத் துறை பிடிக்க விரும்புபவர்களை பிடிக்கவும் கடத்தவும் உதவி செய்தல், ரகசிய விமானங்கள் தம் நாட்டுக்குள் வந்து போக அனுமதித்தல் என்று பல வகையில் அமெரிக்க உளவுத் துறைக்கு ஊழியம் புரிந்திருக்கின்றன இந்த நாடுகள்.
  • டிசம்பர் 2012ல் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம், ‘மாசிடோனிய அரசு அமெரிக்க உளவுத் துறையுடன் ஒத்துழைத்தது மூலம் காலித்-எல்-மஸ்ரியின் மனித உரிமைகளை மீறியது’ என்று தீர்ப்பளித்தது. அமெரிக்க உளவுத் துறை காலித்தை சித்திரவதை செய்ததையும் அது உறுதி செய்தது.
  • ‘எகிப்து நாட்டைச் சேர்ந்த அபு ஓமரை அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் சட்ட விரோதமாக கடத்திச் சென்றனர்’ என்று இத்தாலிய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
  • இது போன்ற பல வழக்குகள் போலந்து, லித்துவேனியா, ரோமேனியா, இத்தாலி நாடுகளில் உள்ள ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்திலும், ஆப்பிரிக்க மனித உரிமைகள் கழகத்தின் முன்பும், எகிப்து, ஹாங்காங், இத்தாலி, இங்கிலாந்து நாட்டு உள்ளூர் நீதிமன்றங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன.
2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம், அமெரிக்காவின் மீதான விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், ‘அமெரிக்கா பயங்கரவாதத்துக்கு எதிராக போர் தொடுப்பதாக’ அறிவித்தார்.  ‘நீங்கள் எங்கள் பக்கம் இருக்க வேண்டும்’ இல்லை என்றால், ‘நீங்கள் எதிரிகளின் பக்கம் என்று எடுத்துக் கொள்வோம்’ என்று வெளிப்படையாக அனைத்து உலக நாடுகளையும் மிரட்டினார்.
‘பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தப் போர் தொடர்ந்து நடக்கும், பல வடிவங்களில் நடக்கும், சில வெளிப்படையான நடவடிக்கைகளாக நடக்கும், பல தாக்குதல்கள் பற்றிய விபரங்கள் வெளியில் வரவே போவதில்லை’ என்றும் அமெரிக்க மக்களிடமும் உலகத்தின் முன்னும் தாம் செய்யவிருக்கும் எல்லா சட்ட விரோத, மனித விரோத செயல்களுக்கும் முன் தேதியிட்ட ஒப்புதல் வாங்கியிருந்தார்.

அதைத் தொடர்ந்து உலகெங்கிலுமிருந்து அமெரிக்க நலன்களுக்கு எதிரானவர்களாக கருதப்பட்ட, அமெரிக்க விரிவாக்கத்தை எதிர்ப்பவர்களாக அடையாளம் காட்டப்பட்ட நூற்றுக் கணக்கான நபர்களை சட்ட விரோதமாக சிறை பிடிப்பது, உள்ளூரிலேயே அடைத்து வைத்து சித்திரவதை செய்வது, சட்டத்துக்கு புறம்பாக கடத்திச் செல்வது,  அமெரிக்காவுக்குச் சொந்தமான கியூபாவில் இருக்கும் குவான்டாமோ பே சித்திரவதை மையத்தில் குவித்து வைப்பது என்று பயங்கரவாத நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விட்டது அமெரிக்க உளவுத் துறை.
ஜார்ஜ் புஷ்ஷின் இரண்டு நான்காண்டு ஆட்சிக் காலங்கள் முடிந்து 2009ல் ஒபாமா ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் இது போன்ற கடத்தல் நடவடிக்கைகள் கைவிடப்படவில்லை. 2009ம் ஆண்டு உலக மக்களின் கருத்து தமக்கு எதிராக திரும்புவதை தவிர்ப்பதற்காக சித்திரவதையை சட்ட விரோதமாக்குவதாகவும், உளவுத் துறை நடத்தி வரும் சிறைகளை மூடுவதாகவும் ஒபாமா அறிவித்தாலும், உளவுத் துறையின் குறுகிய கால சிறைபிடித்தலையும் விசாரணைகளையும் அமெரிக்க அரசு தொடர்ந்து அனுமதிக்கிறது. சட்டவிரோதமான கடத்தல்கள் பற்றிய இப்போதைய அமெரிக்க அரசின் கொள்கை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு கொடுமைகளை செய்யும் அமெரிக்காதான் உலக நாடுகளில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு கண்ணீர் விடும் நாடகத்தை நாள் தோறும் ,நாடுகள் தோறும் நடத்தி நடித்துவருகிறது .

                                                                                                                                               - -தனபால்                                                                                      புதிய ஜனநாயகம், ஜனவரி 2015.
============================================================================================ 

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...