bloggiri.com - Indian Blogs Aggregator

வெள்ளி, 10 அக்டோபர், 2014

வைகை புயல் வடிவேலு



பிறந்தநாள் ....!
வடிவேலு 25

* வீட்டில் பெரிய அளவில் கலைஞர், ஜெயலலிதா விடம் அவார்டு வாங்கிய படங்களை மாட்டி வைத்திருக்கிறார் வடிவேலு. 'இவங்க ரெண்டு பேருமே பெரிய தலைவர்கள். அதோட எனக்கு ரசிகர்கள்!' என்பார் பெருமிதமாக!

* தன் முதல் கார் டாடா சியாராவை இன்னும் பத்திரமாகப் பாதுகாக்கிறார். முதலில் வாங்கிய சொத்து என்பதால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்த காரை அவரே துடைத்துச் சுத்தப்படுத்துவார். 'நான் என் கார்கிட்டே பேசுவேன் அண்ணே, சொன்னா நம்புங்க... சொந்தக்காரங்க நிறையப் பேரு இருந்தாலும், நான் வாங்கின முதல் சொந்த கார் இதுதான்ல!' என்பார்!

* வடிவேலுவுக்குத் தான் நடித்த படங்களில் பிடித்த படம் 'தேவர் மகன்'. 
"'கமல், சிவாஜி சார் காம்பினேஷன். காமெடியனான என்னை கேரக்டர் ரோல்ல உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க வெச்சு, மக்களைக் கண் கலங்கவெச்ச படம்ல அது!' 
என்று மெய் சிலிர்ப்பார்!


* 'ஆயுளோடு வாழணும்னா ஆயில் கூடாது' என்பது வடிவேலுவின் பஞ்ச் டயலாக். எண்ணெயில் பொறித்த உணவென்றால், கைப்புள்ள எகிறி ஓடுவார்!

* மகன் வடிவேலுவை எந்தக் காலத்திலும் பெயர் சொல்லி அழைப்பதில்லை அம்மா சரோஜினி. வாயாரப் பாசம் கொப்பளிக்க 'என்னப் பெத்த ராசா' எனத்தான் கூப்பிடுவார்!

* வடிவேலுவுக்கு 'டாம் அண்ட் ஜெர்ரி' காமெடிதான் ரொம்ப இஷ்டம். எக்கச்சக்க டி.வி.டி-க்களை தினம் தினம் பார்த்துச் சிரித்து மகிழ்வார்!

* விடுமுறை கிடைத்தால், குடும்பத்தை அள்ளிப்போட்டுக்கொண்டு குற்றாலத்துக்குப் போய்விடுவார். வெளிநாடு என்றால் பிடித்த ஊர் லண்டன்தான். 'தேம்ஸ் நதியில மிதக்கிறதுல மனுஷப் பயபுள்ளைக்கு ஒரு சொகம்ணே... அது சொர்க்கம்ணே!' என்பார்!

* ஆபீஸில் இருக்கும்போது, ரசிகர்கள் போன் செய்தால் தானே எடுத்து, 'ஆமாண்ணே! வடிவேலுதான் என்ன அதுக்கு... நல்லாப் பேசுங்க, கேட்டுக்கிறேன்' எனச் சொல்லிப் பரவசப்படுத்துவார்!

* வடிவேலு இதுவரைக்கும் 450 படங்களில் நடித்திருக்கிறார்!

* காலையில் நாலு இட்லி, தொட்டுக்கொள்ள மீன் குழம்பு. மதியம் கொஞ்சம் சாப்பாடு, இரண்டு சப்பாத்தி. இரவு இட்லி, புதினா சட்னி, மல்லிப் பொடி. விருந்துக்கு வடிவேலுவை அழைத்தால் ரொம்ப மெனக்கெட வேண்டாம் என்றுதான் இந்தத் தகவல்!

* முதன் முதலில் கேமரா முன் பேசிய வசனம்... 'அண்ணே, நீ ரொம்ப எவனையும் மதிக்கிறதில்ல' என்பதுதான். 'ராசாவின் மனசிலே'தான் படம்!

* ரசிகர்கள் ஆட்டோகிராஃப் கேட்டால் கையெழுத்துப் போட்டு, பக்கத்திலேயே வேல் படம் வரைந்து தருவார்!

* என்ன பேசினாலும், யாரிடம் பேசினாலும் அடிக்கடி 'ஆஹா' எனும் வார்த்தை வந்து விழுந்துகொண்டே இருக்கும். இன்னொரு வார்த்தை 'அதாவதுன்னா'. 'ஏன் கேட்கிறீங்க, சுட்டிங்கில் டயலாக் பேசும்போதும் இந்த வார்த்தைகள் முன்னாடி வந்து நிக்கும்' எனச் சிரிப்பார்!

* நகைச்சுவையில் நம்ம குருக்கள் என்று மூன்று பேரைச் சொல்வார். அவர்கள் சந்திரபாபு, தங்கவேலு, சுருளிராஜன். தன்னை இவர்களின் கலவை என ரஜினி ஒரு மேடையில் சொன்னதைச் சிலாகிப்பார்!

* டி.எம்.சௌந்தர்ராஜனின் வெறிபிடித்த ரசிகர் வடிவேலு. அவர் பாடிய நூற்றுக்கணக்கான பாடல்களை அப்படியே ராகம் போட்டுப் பாடுவார்!

* ஜோதிடத்தில் பலத்த நம்பிக்கை உள்ளவர் வடிவேலு. வியாழக்கிழமை என்றால், மஞ்சள் சட்டை. வெள்ளிக்கிழமை அரக்கு கலர் சட்டை, சனிக்கிழமை கறுப்புதான். மற்ற தினங்களில்தான் வடிவேலுவை வெவ்வேறு வண்ணச் சட்டைகளில் பார்க்க முடியும்!

* மதுரை வீட்டுக்குப் போனால், கண்மாய் மீன்களைப் பிடித்து வரச் செய்வார். வெயிட், எந்த வகை மீன் என்று பார்த்துதான், அதைச் சமையலறைக்கு அனுப்பு வார். போன பிறவியில் கொக்காகப் பிறந்திருப்பாரோ என்னவோ?!


* அம்மா சரோஜினி, ஐயனார், மதுரை மீனாட்சி, பழநி முருகன் இவர்கள்தான் வடிவேலு தினம் வணங்கும் தெய்வங்கள். ஆபீஸ், வீடு எல்லாவற்றையும் இந்த நான்கு படங்கள்தான் அலங்கரிக்கும்!

* ஒரு தடவை சூட்டிங்கில் கால் பிசகிக்கொள்ள, ஓய்வில் இருந்தார் வடிவேலு. குணமாவது தாமதமாக, காலை விந்தி விந்தி நடிப்பதையே ஸ்டைல் ஆக்கி நடித்த படம்தான் 'வின்னர்'. இன்று வரை 'வின்னர்' காமெடிதான் அவருக்கு ஆல்டைம் பெஸ்ட்!

* ரயில் பயணம்தான் ரொம்பவும் பிடிக்கும். ஆனால், ரசிகர்களின் அன்பைத் தாங்க முடியாமல் விமானப் பயணம் அதிகம் இப்போது. 'கூவிக்கிட்டு போற ரயில் சத்தம்தான் பிடிக்குது. ஃப்ளைட்டில் கட்டிப்போட்டு உட்கார வேண்டியிருக்கு' என்பார் அந்த அனுபவத்தை!

* சூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலு இருந்துவிட்டால் இளம் தலைமுறை ஹீரோக்கள் அவரைத் தாங்கிக் கொண்டாடுவார்கள். சிரிப்பு வெடிகளைக் கொளுத்திப் போட்டு அதிரவைப்பார். வடிவேலுவின் பயங்கர ரசிகர் விஜய்!

* விதவிதமான வாட்ச் அணிந்துகொள்வதில் ஆர்வம் உடையவர் வடிவேலு. கையில் காசு இல்லாத சிறுவயது முதலே எங்கிருந்தாவது பிய்த்துப் பீறாய்ந்து வாட்ச் கட்டிக்கொள்வார்!

* ஃபேஷன் உடைகளை அதிகமாகப் பயன் படுத்துவார் வடிவேலு. யாருமே எதிர்பார்க்காத, விதவிதமான டிசைன் துணிகளைக் கடைகளில் இருந்து வரவழைத்துத் தேர்ந்தெடுப்பார்!

* வடிவேலுவின் மனசுக்குப் பிடித்த நடிகைசரோஜா தேவிதான். 'ஆதவன்' படப்பிடிப்பில் அவரிடமே 'நில்லடி நில்லடி சீமாட்டி' பாடலை முழுதாகப் பாடிக் காட்டி நடித்து சபாஷ் வாங்கியதைச் சந்தோஷத்தோடு குறிப்பிடுவார்!



- நா.கதிர்வேலன்,

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...